சென்னை: சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) சென்னை திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ஜூலை 15ஆம் தேதி விசாரணைக்குச் செல்ல உள்ளதாகக் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் 2016ஆம் ஆண்டுமுதல் சிகிச்சை பெற்று வருவதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறிய அவர், சிகிச்சை பெற சிங்கப்பூர் செல்வதற்காக கடந்த மாதம் முறைப்படி விசா பெற்றதாகக் குறிப்பிட்டார்.
“ஜூன் 25ஆம் தேதியே சிங்கப்பூர் செல்வதாக இருந்தது. சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் சிங்கப்பூர்ப் பயணத்திற்கான விமானப் பயணச்சீட்டைக் காண்பித்தேன்.
ஜூன் 25ல் லஞ்ச ஒழிப்புக் காவல்துறை சோதனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால் அன்று அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகக் கூறிய அவர், வயிறு, இதயம் தொடர்பான பிரச்சினைக்குச் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்கள் அனைத்தும் தம்மிடம் உள்ளதாகக் கூறினார்.
ஜூலை 3ல் கொடுத்த மனுவுக்கு 10 நாள்களுக்குப் பிறகு வருவதாக கடிதம் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பதில் அளித்தேன். மீண்டும் 9ஆம் தேதி வரச்சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறை ஆணை பிறப்பித்தது.
விசாரணைக்கு ஒத்துழைப்பாக நான் கூறியும் ‘ஓடுகிறேன், ஒளிகிறேன்’ எனக் கூறுகின்றனர். ஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவினர் பழக்கம் கிடையாது. ஜூலை 15ஆம் தேதி விசாரணைக்குக் கட்டாயம் செல்வேவேன்,” என்றார் அவர்.

