சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தச்சென்ற தமிழக விவசாயிகள் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தமிழக விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக விவசாயிகள் டெல்லி நோக்கி ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களை நாக்பூரில் தடுத்து நிறுத்தி மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைக் கண்டித்துள்ள விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக ரீதியிலான போராடும் உரிமையைப் பறிக்கும் வகையில் நாக்பூர் காவல்துறை செயல்பட்டுள்ளதாகவும் கைதான விவசாயிகளை உடனடியாக விடுவித்து அவர்கள் மீண்டும் டெல்லி செல்ல உரிய ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டுமென்றும் சாமி. நடராஜன் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, காவிரியில் போதுமான நீர் இல்லாததால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களைகட்டவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில், குளக்கரைகளில் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடி அப்பகுதி பெண்கள் வழிபாடு செய்தனர்.
காவிரி கரைமடை மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் தியாகராஜர் கோவிலின் கமலாலயக் கரையில் ஏராளமான பெண்கள், புதுமணத் தம்பதியர், சிறார்கள் திரண்டு வந்து குளக்கரையில் அரிசி, பழங்கள் ஆகியவற்றை வைத்துப் பூசை நடத்தி வழிபட்டனர்.
இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் தமிழகத்தில் குறுசம்பா சாகுபடிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

