கோடை வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தின் மின்சாரப் பயன்பாடு அதிகரிப்பு

கோடை வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தின் மின்சாரப் பயன்பாடு அதிகரிப்பு

1 mins read
21ab8dd4-a3fe-4314-b970-fbbfd7890831
வெப்பத்தின் கொடுமையால் வீடுகள், அலுவலகங்களில் மின் விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகள் இடைவிடாது இயங்கி வருகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்​களாக அதிகரித்துள்ளதால் வீடுகளில் எந்நேர​மும் மின்விசிறி, குளிர்சாதனங்கள் ஓடிக்கொண்டே இருக்​கின்​றன.

இதனால், மாநிலத்தின் அன்றாட மின்சாரப் பயன்பாடு 466.16 மில்லியன் யூனிட்டுகள் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் அதிகரித்துள்ளது.

வீடுகள், அலுவலகங்களில் மின் விசிறிகள், குளிர் சாதனங்கள் இடைவிடாது இயங்கி வருகின்றன.

பொதுவாக, தமிழகத்தின் அன்றாட மின் தேவை சராசரியாக 16,000 மெகாவாட்டாக இருக்கும். தற்போது அது 21,000 மெகாவாட்டைக் கடந்துள்ளது.

“வழக்கமாக தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் இயக்கத்தில் இருக்கும் மதிய நேரத்தில்தான் மின் தேவை அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு இரவு நேரப் புழுக்கத்தால், வீடுகளில் குளிர்சாதனப் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுவே மின் பயன்பாடு உச்சத்தைத் தொட முக்கியக் காரணம்,” என்று மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறினர்.

வரும் நாள்களில் வெயில் இன்னும் அதிகரித்தால், மின் தேவை 23,000 மெகாவாட் வரை உயரக்கூடும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறினர்.

மின் தேவை தொடர்ந்து அதிகரித்தாலும், தடையின்றி மின்சாரம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மின்வாரியம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்