திருச்சி: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான அமைச்சர் கே.என். நேருவை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட அவர், கூட்டணி ஆட்சி என்ற நிலையைத் தமிழக மக்கள் அறவே ஏற்படுத்த மாட்டார்கள் என்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ஏராளமான நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகப் பட்டியலிட்ட அவர், சிங்கப்பூருக்கு நிகராக, ஆசிய கண்டத்தில் வேறு எங்கும் இல்லாத அளவில் பேருந்து முனையம் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் அடுத்து அமையப்போவது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிதான் என்றும் அதற்கான தீர்ப்பை தமிழக மக்கள் வழங்குவார்கள் என்றும் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் எனத் தொடர்ந்து அழுத்தம் தந்துவரும் நிலையில், அதே கூட்டணியில் உள்ள வைகோ, கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

