சென்னை: நடிகர் அஜித் என்ன கருத்து தெரிவித்தாலும் அது பாராட்டுக்குரியது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.
இந்நிலையில், அண்மையில் ஓர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது, கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அஜித், அந்தச் சம்பவத்துக்கு ஒருவர் மட்டும் பொறுப்பேற்க இயலாது என்றும் சமுதாயத்தில் உள்ள எல்லாரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். அவரது பேட்டி தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் கூறியது, அவருடைய சொந்தக் கருத்து எனத் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருவதால் தாம் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்றார்.
“நடிகர் அஜித் கூறியது அவருடைய சொந்தக் கருத்து. அதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. அவர் எது கூறினாலும் அது பாராட்டத்தக்கது,” என்றார் திரு உதயநிதி.
தற்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில், பாஜகவுக்கு பாதகமாக அமையும் வாக்குகளை நீக்கக்கூடிய நடவடிக்கைகளில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

