சென்னை: கடந்த காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டதால் அதிமுகவை விஜய் விமர்சிக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.
அண்மையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த மாநாட்டில் முதல் முறையாக அரசியல் உரையாற்றிய நடிகர் விஜய், பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆனால், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளை அவர் விமர்சிக்கவில்லை. இது, எதிர்கால கூட்டணிக்கான வியூகமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில், தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு, அக்கட்சியுடன் கூட்டணி வைக்கப்படுமா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டை சகோதரர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்தியுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி முடிவெடுக்கப்படும்.
“அதிமுக சிறப்பாகச் செயல்பட்டதால் எங்களை விஜய் விமர்சிக்கவில்லை. அவரது கட்சியின் கருத்துகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொள்கையே கிடையாது. ஒரே கொள்கையுடைய கட்சிகளாக கூட்டணி அமைத்துள்ளோம் என்று முதல்வர் கூறியுள்ளார். பிறகு ஏன் தனித்தனியாக செயல்பட வேண்டும். அனைவரும் ஒரே கட்சியாக செயல்படலாமே.
“திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக உறவு உள்ளது. தற்போது அனைத்துக் கட்சிகளும் இந்தக் கருத்தை தெரிவித்து வருகின்றன,” என்றார் பழனிசாமி.
தொடர்புடைய செய்திகள்
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

