சென்னை: உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தமிழை வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளார்.
தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி அனைத்துலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பன்மொழி கலாசாரத்தை அனுசரிப்பதும் ஆதரிப்பதும் இதன் நோக்கமாகும்.
அந்த வகையில் உலக தாய்மொழி தினமான சனிக்கிழமை அன்று (பிப்ரவரி 21) தமிழ் மொழியை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழே நீ வாழ்ந்திடு!” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி,” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
“நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு,” என்று பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக தாய்மொழி தினத்தில் முதல்வர் ஸ்டாலின் தவிர கமல்ஹாசன், டிடிவி தினகரன் போன்ற பல கட்சித் தலைவர்கள் தமிழை வாழ்த்தியும் அதன் பெருமையை சுட்டிக்காட்டியும் வாழ்த்தியிருக்கின்றனர்.

