துவாஸ் தொழிற்சாலைக் கட்டடத்தில் தீ விபத்து; தீக்காயங்களுடன் எண்மர் மருத்துவமனையில்

துவாஸ் தொழிற்சாலைக் கட்டடத்தில் தீ விபத்து; தீக்காயங்களுடன் எண்மர் மருத்துவமனையில்

2 mins read

துவாசில் உள்ள தொழிற்சாலைக் கட்டடம் ஒன்றில் இன்று (பிப்ரவரி 24) தீப்பற்றியதில் காயமடைந்த எண்மர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீப்பற்றிய இடத்துக்கு அருகில் இருந்த மேலும் 65 பேர் தீயணைப்பாளர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பாகவே பத்திரமான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியது.

Watch on YouTube

எண் 32E துவாஸ் அவென்யூ 11ல் உள்ள கட்டடத்தில் இன்று காலை 11.25 மணியளவில் தீச்சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பாளர்கள் சென்றனர்.

அந்த முகவரியில் உள்ள Platinum@Pioneer தொழிற்சாலை மேம்பாட்டில் 16 தொழிற்சாலைகளும் இரண்டு கட்டடங்களில் ஒரு உணவகமும் உள்ளன.

அந்த இரு உணவகக் கட்டடங்களில் ஒன்றின் மாடியில் 11 ஊழியர்கள் தங்க அனுமதிக்கப்பட்ட விடுதி இருப்பதாக சூன் ஹாக் குழுமம் இம்மாதம் 16ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.

அந்த வளாகத்தின் தரைத் தளத்தில் கிட்டத்தட்ட ஒரு டஜன் ஊழியர்கள் கூடியிருப்பதையும் தீப்பற்றிய பகுதியிலிருந்து இன்னும் புகை வெளியேறி மேல் நோக்கிச் செல்வதையும் காட்டும் காணொளிகள் வெளியாகின.

அவர்களில் 8 பேர் உடலில் பெரும்பாலான அளவுக்கு தோல் உரிந்த காயத்துடன் காணப்பட்டனர். அவர்களில் ஒருவர் வலியில் அலறியபடி தரையில் விழுந்து கிடப்பதும் தெரிந்தது.

அந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விசாரணை நடத்துவதற்காக ஒரு குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாக சூன் ஹாக் குழும பேச்சாளர் தெரிவித்தார்.

தீ மூண்டதற்கான காரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீப்பற்றிய கட்டடத்தில் Shield+ நிறுவனம் செயல்பட்டதாகக் கூறப்பட்டது. Shield+ என்பது தீ பாதுகாப்பு உபகரணம் வழங்குபவர்கள்.

Shield+ நிறுவனத்துக்கு எதிரில் இருக்கும் P3 Project எனும் இயந்திரப் பொறியியல் நிறுவன உரிமையாளரான திரு வோங் வீ சியாங், இன்று காலை 11 மணியளவில் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் உடனடியாக தம் ஊழியர்களுடன் தம் அலுவலகத்திலிருந்து வெளியேறியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

ஆனால், தம்முடைய ஊழியர்கள் இருவர் அந்த வெடிப்பில் காயமுற்றதை பின்னர் கண்டுபிடித்ததாகக் கூறினார் அவர்.

ஒரு ஊழியரின் கைகளிலும் புட்டங்களிலும் தீக்காயம் ஏற்பட்டதாகவும் மற்றொருவர் வெடிப்பு காரணமாக கீழே விழுந்ததாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.

காயமடைந்த தம்முடைய ஊழியர்கள் இருவரையும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் திரு வோங். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது அந்தக் கட்டடத்தில் இருந்த ஒரு கட்டடம் புகை சூழ்ந்து காணப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவிகளை அணிந்துகொண்டு தீயின் மூலத்தை அறியும் பணியில் ஈடுபட்டனர்.

தீப்பற்றிய கட்டடத்தில் உள்ள தொழிற்சாலை கலவை ஒன்றில் ஏற்பட்டிருந்த தீயை இரண்டு குழாய்களில் தண்ணீர் பீய்ச்சி அணைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்