சிங்கப்பூரில் இன்று (மே 21) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 448 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,812 ஆகியுள்ளது.
புதிய சம்பவங்களில் 13 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
உள்ளூரில் கிருமித்தொற்று பதிவான 13 பேரில் எழுவர், தாதிமை இல்லங்கள், பாலர் பள்ளி ஊழியர்கள் போன்றவர்கள். இந்தக் குழுவினரிடையே பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியுடன் தொடர்புடைய ஒரு குடும்பத்தின் கிருமித்தொற்று குழுமத்தைச் சேர்ந்தவர் நால்வர்; வேறு இரு சம்பவங்களில் தொடர்புகளைத் தடமறியும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும் நிலையில், கொவிட்-19 நிலவரம் கட்டுக்குள் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கடந்த எட்டு நாட்களாக குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை, புதிதாக கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. விடுதிக்கு வெளியே வசிப்போரிடையே கிருமித்தொற்று எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, விடுதிகளில் தங்கியிருக்கும் 323,000 ஊழியர்களிடையே 27,106 பேருக்கு, அதாவது 8 விழுக்காட்டுக்கும் சற்று அதிகமானோருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தின நிலவரப்படி விடுதிகளில் தங்கியிருக்கும் 82,000 ஊழியர்களுக்கு கிருமித்தொர்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 30 விழுக்காட்டினருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதை அண்மைய நிலவரம் காட்டுகிறது.
விடுதிக்கு வெளியில் தங்கியிருக்கும் 5.3 மில்லியன் சிங்கப்பூர்வாசிகளிடையே, 1,678 (அதாவது 0.03%) பேருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றுவரை 11,198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கிருமித்தொற்று கண்டவர்களில் இந்த எண்ணிக்கை சுமார் 38%.
கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.
உலக அளவில் 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 328,000 பேர் உயிரிழந்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online