சிங்கப்பூரில் இன்று (மே 22) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 614 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,426 ஆகியுள்ளது.
புதிய சம்பவங்களில் நால்வர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் நேற்று உறுதி செய்யப்பட்ட 448 கிருமித்தொற்று சம்பவங்களில் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளிடையே பாதிப்பு எண்ணிக்கை 13 என முந்தைய சில நாட்களைவிட அதிகமாக இருந்தது.
அவர்களில் எழுவர், தாதிமை இல்லங்கள், பாலர் பள்ளி ஊழியர்கள் போன்றவர்கள். இந்தக் குழுவினரிடையே பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவற்றுள் நான்கு சம்பவங்கள் எண் 6 சீமெய் ஸ்திரீட் 3ல் உள்ள ஆரஞ்சு வேலி தாதிமை இல்லத்தில் வசிக்கும் 72 முதல் 97 வயதுக்குட்பட்டவர்கள் தொடர்பிலானது.
அனைத்து தாதிமை இல்லங்களிலும் கொவிட்-19 பரிசோதனைகள் செய்யப்படுவதன் அங்கமாக அந்த தாதிமை இல்லத்தில் மேற்கொண்ட சோதனையில் இந்தப் புதிய சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
நேற்று பதிவான மூன்று புதிய சம்பவங்கள் பாலர் பள்ளி ஊழியர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டன. இந்தப் பரிசோதனைகளில் சில புதிய சம்பவங்கள் கண்டறியப்படும் என்று எதிர்பார்த்ததாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு நேற்று குறிப்பிட்டிருந்தது.
இம்மாதம் 15ஆம் தேதி பாலர் பள்ளி ஊழியர்களிடையே தொடங்கப்பட்ட கொவிட்-19 பரிசோதனைகளில் இதுவரை 10,400 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து ஊழியர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் பரிசோதனைகள் செய்து முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய 434 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் தொடர்பானவை.
கடந்த ஒன்பது நாட்களாக குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை, புதிதாக கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. நேற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 910.
நேற்றுவரை 12,108. பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 901 பேரில் 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.
உலக அளவில் 5.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 333,000 பேர் உயிரிழந்தனர்.