விமான, கடல்துறைகளைச் சேர்ந்த 37,000 முன்களப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
அவர்கள் அனைவருக்கும் இரு மாதங்களுக்குள் தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாரத்திற்குள் முதல் தடுப்பூசியைப் பெற ஏறக்குறைய 13,000 ஊழியர்கள் முன்பதிவு செய்து இருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்திற்கு அமைச்சர் ஓங் நேற்று வருகைபுரிந்தார்.
கொரோனா நோய்ப் பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்து மையத்தை மீட்டு எடுப்பதில் தடுப்பூசி மிக முக்கியமான நடவடிக்கை என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
விமான, கடல் துறைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பட்சத்தில், சிங்கப்பூர் பாதுகாப்பானது எனவும் நம் மக்கள் பிணைப்புமிக்கவர்கள் எனவும் மற்றவர்கள் அறிந்துகொள்வர் என்று அமைச்சர் கூறினார்.
"அது நமது மதிப்பை உயர்த்தும் வகையில் பெரும் சாதகமாக அமையும்," என்று அவர் வலியுறுத்திச் சொன்னார்.
உலகிலேயே முதன்முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் அனைத்துலக விமானப் போக்குவரத்து நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடுவதின்மூலம் சிங்கப்பூரைப் பாதுகாக்கலாம் என்ற அமைச்சர் ஓங், சிங்கப்பூரில் கிருமித்தொற்று கட்டுக்குள் இருந்தாலும் வெளிநாடுகளில் அது காட்டுத்தீ போல் பரவி வருகிறது என்றும் சொன்னார்.
"நமது 37,000 முன்களப் பணியாளர்களும் எல்லைகளைக் காக்கும் காவலர்கள். ஏனெனில், எல்லைகளின் வழியாக கிருமித்தொற்று எளிதில் பரவக்கூடும்," என்றார் அவர்.
அமைச்சர் ஓங், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாகி கோ சூன் ஃபோங், 'சேட்ஸ்' தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு அலெக்ஸ் ஹங்கேட் ஆகியோரும் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
நான்காம் முனையத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் இப்போது நாளொன்றுக்கு 2,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் என்றும் அந்த எண்ணிக்கை மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
கொரோனா தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளில் இருந்து பயணிகளுடனும் அவர்களின் பயணப்பைகளுடனும் அவர்களுக்குத் தொடர்பு ஏற்படக்கூடும் என்பதால், முதற்கட்டமாக, விமானச் சிப்பந்திகள், துப்புரவாளர்கள், பாதுகாப்புப் பரிசோதகர்கள், பயணப்பைகளைக் கையாள்வோர் உட்பட 20,000 முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதனிடையே, ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் கடல் துறை ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. அம்மையத்தால் ஒரு நாளைக்கு 1,000 பேரைக் கையாள இயலும்.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாத பணியாளர்கள் குறித்துக் கேட்டதற்கு, தனிப்பட்ட காரணங்களுக்காகச் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குவதாக அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
ஆயினும், பெரும்பான்மையான ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், "ஆகையால் விருப்பமுள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி நடவடிக்கையைத் தொடங்குவோம். அதனால் உந்தப்பட்டு இன்னும் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவர்," என்றும் சொன்னார்.
கடந்த நவம்பரில் தொடங்குவதாக இருந்த ஹாங்காங்-சிங்கப்பூர் இடையிலான இருதரப்புப் பயண ஏற்பாடு, ஹாங்காங்கில் கிருமித்தொற்று பாதிப்பு அதிகமானதை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, அது எப்போது தொடங்கும் என உறுதியாகக் கூற முடியாது என்று திரு ஓங் கூறியுள்ளார்.
மற்ற நாடுகளுடன் இருதரப்புப் பயண ஏற்பாடுகளைத் தொடங்குவதைச் சிங்கப்பூர் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

