சிங்கப்பூரில் இருந்து இறைதரிசனத்திற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றுபோது விபத்தில் சிக்கி மாண்ட சிங்கப்பூரர்கள் இருவரின் சடலங்கள் சிங்கப்பூர் வந்துசேர்ந்தன.
அவர்களுக்கான இறுதிச் சடங்கு புளோக் 633 ஹவ்காங் அவெண்யூ 8ல் புதன்கிழமை (மார்ச் 15) மாலை இடம்பெறுகிறது.
வியாழக்கிழமை (மார்ச் 16) மாலை வாக்கில் மாண்டவர்களின் உடல்கள் மண்டாய் தகனச்சாலைக்கு எடுத்துச்செல்லப்படும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
மார்ச் 12ஆம் தேதி, யுவராஜன் செல்வமும் அவருடைய மனைவி நாகஜோதி வரதராசும் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மாண்டனர். அவர்களுடன் பயணம் செய்த ஓட்டுநரும் மாண்டார்.
இத்தம்பதிக்கு 40 வயது இருக்கும் என்று உறவினர்கள் கூறினர்.
சென்னைவரை விமானத்தில் சென்ற தம்பதி பின்னர் அங்கிருந்து காரில் திருப்பதிக்குக் கிளம்பினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, எண்ணெய்க் கொள்கலன் லாரி ஒன்று அதன்மீது மோதியது.
இதில் காரில் சென்ற மூவரும் நிகழ்விடத்திலேயே மாண்டுபோனதாக ‘ஏஎன்ஐ’ செய்தி தெரிவித்தது. அவர்களைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
இவ்விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றது காவல்துறை. பின்னர் உள்ளூர்வாசிகளின் துணையுடன் காவல்துறையினர் காரிலிருந்து அவர்களின் உடல்களை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை எண்ணெய்க் கொள்கலன் லாரி ஓட்டுநரைக் கைதுசெய்து விசாரித்து வருகிறது.
விபத்தில் சிக்கிய காரிலிருந்து உடல்களை மீட்கும் காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது.