அனுபவம் இல்லாவிட்டாலும் புதியனவற்றைக் கற்பதில் தயக்கம் காட்டியதில்லை கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா செல்வம், 16. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், படைப்பாளர், நடிகை, வழிகாட்டி எனப் பலதரப்பட்ட பொறுப்புகளை ஏற்ற இவர், பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வுகளில் நன்றாகச் செய்துள்ளார்.
கூச்ச சுபாவமுடைய சிறுமியைப்போலத் தோற்றமளித்தாலும் பவித்ராவின் பேச்சில் தெளிவும் வெளிப்படைத்தன்மையும் உள்ளன.
"அடிப்படையில் மற்றவர்களுடன் பேசிப் பழகுவது எனக்கு மிகவும் பிடிக்கும்," என்றார் பவித்ரா. "அவர்களுடன் உறவாடி மகிழ்ச்சிப்படுத்து வதை விரும்பியதால் நான் எனது பள்ளி நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளராக ஆகவேண்டும் என விரும்பினேன்," என்றார்.
சுற்றியிருந்தவர்கள் தொடர்ந்து அளித்துவந்த ஊக்கம் அவரது வெற்றிக்கு அடிகோலியதாகக் கூறுகிறார். "எனக்குத் திறமை இருப்பதாகக் கூறிய என் ஆசிரியர்கள், என்னைப் படைப்பாளராக முன்மொழிந்தனர். நான் படைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் என் வகுப்பு நண்பர்கள் முன்வந்து ஆதரவு அளித்தனர்," என்றார் அவர்.
பள்ளியின் முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் படைப்பாளராக இருந்ததுடன் ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லட்' போன்ற மேடை நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார். முன் அனுபவம் இல்லாத பல நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் செய்து தன்னை மேம்படுத்திக் கொண்டார் இந்த மாணவி.
இத்தனை நடவடிக்கைகளில் ஈடுபடும் இவர், தொடக்கத்தில் ஆங்கில, கணித பாடங்களில் சிரமங்களை எதிர்நோக்கினார். ஆயினும், அவற்றில் சிறப்பாகச் செய்ய ஆசிரியர்களின் பொறுமையும் கற்பிக்கும் திறமையும் தூண்டியதாக அவர் கூறினார்.
எப்போதுமே தமிழ்ப் பாடத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதாகக் கூறிய பவித்ரா, வீட்டில் தமிழ் பேசியதே இதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவித்தார்.
"பவித்ரா மிகவும் பொறுப்பான மாணவி. பாரபட்சமின்றி அனைவரிடமும் நன்றாகப் பழகக்கூடியவர். எந்த வேலையை அவருக்குக் கொடுத்தாலும் அவர் அதனைச் சரியாகச் செய்துவிடுவார்," என்றார் கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் மலர்விழி பெருமாள்.
தொடர்புடைய செய்திகள்
"தமிழைப் பொறுத்தவரை அவருக்கு நிறைய ஆற்றல் உள்ளது. அதிகப் பயிற்சி இன்றியும் பவித்ரா கற்பதை விரைவில் உள்வாங்குகிறார்," என்றார் அவர். இந்த உள்வாங்கும் திறனுக்கான ரகசியம் என்னவென்று பவித்ராவிடம் கேட்டபோது, "எதைப் பற்றியும் அளவுக்கு அதிகமாகச் சிந்திக்கக்கூடாது," எனப் பதிலளித்தார்.
"பள்ளியில் வகுப்புகள் நடக்கும்போது அதனைப் பற்றி மட்டும் நினைப்பேன். இணைப்பாட நடவடிக்கைகளின்போது அவற்றைத் தவிர வேறு சிந்தனையில் ஈடுபடமாட்டேன். ஓய்வு நேரங்களில் நான் பள்ளிப் பாடங்களைப் பற்றி கவலைப்படவே மாட்டேன்," என்றார் பவித்ரா.
இந்த மன ஒருமைப்பாடே பவித்ராவின் பலம் என்று அவரது மூன்று மூத்த சகோதரிகளில் ஒருவரான ஷர்மிளா செல்வம், 19, கூறினார்.
"ஆரம்பத்தில் பவித்ரா சுட்டித்தனமாக இருந்தாலும் எப்போதும் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்ற மனப்போக்குடன் செயல்படுவார். மற்றவர்கள் அவரை எளிதில் திசைத்திருப்ப முடியாது," என்றார் ஷர்மிளா.
தாமும் தமது இரண்டு மூத்த சகோதரிகளும் பெற்றோரைப்போல பவித்ராவைப் கண்காணித்து வழிகாட்டியதாகக் கூறினார். இணைப்பாட நடவடிக்கைகளில் பவித்ராவின் மும்முரமான ஈடுபாட்டிற்குக் குறுக்கே நிற்பதற்கு மாறாக அவருக்குத் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வந்ததாக அவர் கூறினார்.
தொழில்நுட்பக் கல்விக் கழகப் படிப்புக்காக பயணம் மற்றும் பயணத்துறை சேவைத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளார் பவித்ரா.
இதற்கிடையே இன்று (டிசம்பர் 19) வெளிவந்த பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வு முடிவுகளின்படி நான்கில் மூவர் அடுத்த ஆண்டு உயர்நிலை ஐந்துக்குத் தகுதி பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.
தேர்வு எழுதிய 9,752 மாணவர்களில் 99.5 விழுக்காட்டினர் வெற்றிகரமாக உயர்நிலை ஐந்துக்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity


