2020 ஆங்கிலப் புத்தாண்டை ஆரவாரத்துடனும் வாணவேடிக்கைகளுடனும் துவங்கும் சிங்கப்பூர், ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிய சட்டங்கள், சில சட்ட திருத்தங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துகிறது.
அவற்றில் முதலாவது, புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயது 20ஆக உயர்த்தப்படுவது.
நாளை முதல் (ஜனவரி 1) புகையிலைப் பொருட்களை வாங்குவது, விற்பது, வைத்திருப்பது, பயன்படுத்துவது போன்றவற்றுக்கான குறைந்தபட்ச வயது 20.
இத்தகைய நடவடிக்கைகளுக்கான குறைந்தபட்ச வயதை 21ஆக உயர்த்தும் திட்டத்தின் இரண்டாவது கட்ட நடவடிக்கை இது. 2017ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு புகையிலை (விளம்பரம் மற்றும் விற்பனைக் கட்டுப்பாடு)(மாற்றியமைக்கப்பட்ட) சட்டத்தின் ஓர் அங்கமாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயது 19ஆக உயர்த்தப்பட்டது. 2021ஆம் ஆண்டு முதல் இத்தகைய நடவடிக்கைகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 21ஆக இருக்கும்.
குறைந்த வயதுடையோருக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு $5,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். புகையிலைப் பொருள்களை விற்பதற்கான அவர்களது உரிமம் தற்காலிகமாக தடை செய்யப்படலாம். மீண்டும் அதே குற்றத்தைப் புரிந்தால் அவர்களது உரிமம் மீட்டுக்கொள்ளப்படும்.
20 வாயதுக்குக் கீழ் இருப்போர் புகையிலைப் பொருட்களை வைத்திருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவர்களுக்கு $300 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களை நடைபாதைகளில் ஓட்டத் தடை!
நடைபாதைகளில் தனிநபர் நடமாட்டச் (பிஎம்டி) சாதனங்களை ஓட்டிச் செல்வோருக்கு கடந்த நவம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டன. அது இன்று இரவு 11.59 வரை தொடரும்.
அதற்குப் பிறகு, நடைபாதைகளில் பிஎம்டி சாதனங்களை ஓட்டிச் செல்வதற்கான தடை நடப்புக்கு வரும். அத்தகைய குற்றச் செயல்களைப் புரிவோருக்கு $2,000 வரை அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை ஆகியன விதிக்கப்படலாம்.
பாலியல் ரீதியான புகைப்படங்கள், காணொளிகள் தொடர்பான சட்டத் திருத்தம்
அனுமதியின்றி பாலியல் ரீதியான புகைப்படங்கள், காணொளிகள் போன்றவற்றை உருவாக்குவது, வைத்திருப்பது, பரப்புவது போன்ற செயல்கள் தொடர்பான குற்றவியல் தண்டனைச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டு அது நாளை முதல் நடப்புக்கு வருகிறது.
தவறான நோக்கத்துடன் தனிநபர் தகவல்களைத் திரட்டுவது
மிரட்டுவது, துன்புறுத்துவது, வன்முறைக்குப் பயன்படுத்துவது போன்ற தவறான நோக்கத்துடன் ஒருவரது சொந்த தகவல்களைத் தேடி கண்டுபிடிக்கும் செயலும் நாளை முதல் குற்றச்செயலாகக் கருதப்படும்.
தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்கும் சட்டப் பிரிவின் கீழ், தவறான நோக்கத்துடன் ஒருவரது சொந்த தகவல்களைத் தேடி கண்டுபிடிக்கும் செயல் குற்றம் என்று கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களிடம் குற்றச்செயல் புரிவோருக்கு கடுமையாக்கப்படும் தண்டனை
அடுத்தபடியாக, நாளை முதல் நடப்புக்கு வரும் மற்றொரு குற்றவியல் தண்டனைச் சட்டத் திருத்தம், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்கள், இளையர் ஆகியோரிடம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கான தண்டனை கடுமையாக்கப்படுவது. உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்வது குற்றமல்ல என்பது உள்ளிட்ட வேறு சில சட்டத் திருத்தங்களும் நாளை முதல் நடப்புக்கு வருகின்றன.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புரிந்த பாலியல் குற்றங்கள் இந்த ஆண்டு அதிகரித்ததுடன், அவை பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்தன.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity