சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் 70 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருடன் ஒரே வார்டில் தங்கி சிகிச்சை பெற்ற 77 வயது சிங்கப்பூர் ஆடவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் சனி, ஞாயிறு கிழமைகளில் ஒரே வார்டில் அவ்விருவரும் தங்கியிருந்ததாக சுகாதார அமைச்சு நேற்று (மார்ச் 6) தெரிவித்தது.
அந்த 70 வயது ஆடவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த திங்கட்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
கடந்த வாரம் சனிக்கிழமை அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தது. அந்த வார்டில் இருந்த மற்ற நோயாளிகளிடமிருந்து அவர் “தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக” அமைச்சு சொன்னது.
அந்த 70 வயது ஆடவரிடமிருந்து அந்த 77 வயது ஆடவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான சாத்தியம் விசாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவை பிரிவு இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார்.
“ஒரே வார்டில் தங்கியிருந்த இருவருக்கும் குறுகிய காலகட்டத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது.
“மருத்துவச் செயல்பாடுகளில் குறைபாடு எதுவும் இல்லாததையும் நோயாளிகளின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்யுமாறு சிங்கப்பூர் பொது மருத்துவமனையை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.
அந்த 70 வயது நோயாளிக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே, மற்ற நோயாளிகளுடன் ஒரே வார்டில் அவர் வைக்கப்பட்டிருந்ததாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தொற்றுநோய்ப் பிரிவுத் தலைவர் டான் துவான் டோங் தெரிவித்தார்.
“கடுமையான சுவாசப் பிரச்சினை உடையோரிடமிருந்து மற்ற நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, ஒரே வார்டில் உள்ள நோயாளிகளின் படுக்கைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
அதாவது, அத்தகைய வார்டுகளில் படுக்கைகளுக்கு இடையிலான இடைவெளி 3 மீட்டராக இருக்கும் என்றார் அவர்.
“இந்த வார்டில், முகக்கவசங்களை அணியுமாறு நோயாளிகளிடம் சொல்வோம்,” என்ற இணைப் பேராசிரியர் டான், மருத்துவமனையின் செயல்முறை மறுஆய்வு செய்யப்படும் என்று சொன்னார்.
#SGH #கொவிட்-19