மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் தமிழாக்கம் பின்வருமாறு:
கொவிட்-19 பரவலைத் தடுக்க நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பிறப்பிக்கப்போவதாக மலேசியா நேற்று இரவு அறிவித்தது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால், பல நாடுகள் ஏற்கெனவே இதேபோன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
பிரதமர் டான்ஸ்ரீ முஹைதீன் யாசினும் நானும் நிலைமை குறித்து இன்று தொலைபேசியில் கலந்துரையாடினோம். அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதற்கான காரணங்களைப் புரிந்து கொள்வதாக அவரிடம் கூறினேன். மேலும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மலேசியா எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்தினேன். சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே உணவுப் பொருட்கள் உட்பட பொருட்கள் மற்றும் சரக்குகளின் போக்குவரத்து தொடரும் என்று அவர் உறுதியளித்ததைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.
எனினும், ஜோகூரை வசிப்பிடமாகக் கொண்டு சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள், மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்கி நடக்க வேண்டும். இது தற்போதைய நிலையிலாவது, அவர்கள் அன்றாட பயணம் செய்வதைத் தடுத்து நிறுத்தும். எனவே, இந்த மலேசிய ஊழியர்கள் விருப்பப்பட்டால், அவர்கள் தற்காலிகமாக சிங்கப்பூரில் தங்குவதற்கு உதவ சிங்கப்பூரிலுள்ள நிறுவனங்களுடன் இணைந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.
கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்த, குறிப்பாக நாங்கள் இணைந்து பணியாற்றக்கூடிய நடவடிக்கைகள் அல்லது ஒரு நாட்டின் நடவடிக்கை மற்ற நாட்டைப் பாதிக்கக்கூடிய நிலை ஏற்படும்பொழுது, இரு தரப்பிலும் செயல்முறைகளை ஒருங்கிணைக்க மூத்த அமைச்சர்களை நியமிக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம். அதன்படி சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனும் மலேசியாவின் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஏற்கெனவே ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு உள்ளனர்.எனினும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அவற்றை நடைமுறைப்படுத்த சில நாட்கள் ஆகலாம்.
இதற்கிடையில், பேரங்காடிகளில் வரிசைகள் வழக்கத்தைவிட நீளமாக இருந்தாலும் மக்கள் இதை இயல்பாக எடுத்துக்கொண்டு, அவர்களுக்குத் தேவையானதை மட்டுமே வாங்கிச்செல்வதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு சிங்கப்பூர் ஏற்கெனவே தயாராக இருப்பதால் நாம் கவலைப்படத் தேவையில்லை. இதைச் சமாளிப்பதற்கான திட்டங்களையும் நாம் கொண்டுள்ளோம். ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை நாங்கள் தீர்வுகண்டு வரும் வேளையில் சிங்கப்பூரர்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும், மீள்திறனுடனும் இருப்பதைக் கண்டு மகிழ்கிறேன்.
- லீ சியன் லூங்