மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று (மார்ச் 18) முதல் நடப்புக்கு வந்துள்ள நிலையில், அங்கிருந்து சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் உணவுப்பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் அவற்றின் விலை ஆகியன பாதிக்கப்படவில்லை. கிருமித்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் மலேசியா இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விதித்துள்ளது.
சிங்கப்பூருக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதாகவும் காய்கறிகள், பழங்கள், மீன் போன்றவற்றின் விலைகள் மாறவில்லை எனவும் பேரங்காடிகள் தெரிவித்தன.
மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையால் சிங்கப்பூருக்கு உணவுப் பொருட்கள் அனுப்பப்படுவது பாதிக்கப்படவில்லை என எஸ்எஃப்ஏ எனப்படும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான மொத்த, சில்லரை விற்பனையாளர்களுக்கான பொருட்கள் இன்று தடையின்றி மலேசியாவிலிருந்து பெறப்பட்டதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.
உணவுப் பொருட்கள் அல்லாதவற்றைக் கொண்டு செல்லும் வாகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கான டயபர்கள் போன்றவையும் சோதனைச்சாவடிகள் வழியாகச் செல்லத் தடையில்லை என்று தமது ஃபேஸ்புக் பதிவில் அமைச்சர் சான் குறிப்பிட்டிருந்தார்.
“நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். மலேசிய அதிகாரிகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டு உணவுப்பொருட்கள் போன்றவை சிங்கப்பூருக்குள் வருவதை உறுதிப்படுத்துவோம்,” என்றார் திரு சான்.
மலேசியாவின் அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் அஸ்மின் அலியுடன் இன்று பிற்பகல் உரையாடியதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சான், மக்களிடையே நம்பிக்கையை நிலைநிறுத்துவதுடன் வர்த்தகத்தையும் தொடர்ந்து, கொவிட்-19 உருவாக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள இருவரும் ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
சுமார் 37% கோழிக்கறி, 16% மீன் ஆகியவற்றுடன் முட்டைகள், காய்கறிகள், பால் போன்றவையும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
மலேசியா உட்பட 170 நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக எஸ்எஃப்ஏ குறிப்பிட்டது. இறக்குமதிகள் தடைப்படும்போது பயன்படுத்துவதற்காக உள்ளூரிலும் உற்பத்தியின் தொடர்பில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அவ்வமைப்பு குறிப்பிட்டது.