‘பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ்’ பாலர்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று (மார்ச் 23) உறுதிசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, புளோக் 126 ஃபெங்ஷான் பகுதியில் அமைந்துள்ள அந்தப் பாலர்பள்ளி துப்புரவு மற்றும் கிருமியை நீக்கும் பணிகளுக்காக இன்று மூடப்பட்டதாக ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் மின்னஞ்சல் மூலம் பெற்றோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நிலவரத்தில் மாற்றம் எதுவும் இல்லையென்றால், அந்தப் பாலர்பள்ளியில் வகுப்புகள் நாளை தொடரும்.
அந்த ஆசிரியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் சுகாதார அமைச்சு ஈடுபட்டு வருகிறது.
‘நர்சரி இரண்டு’ வகுப்பு ஆசிரியரான அவர், கடந்த வாரம் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை விடுப்பில் சென்றார் என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சில வேலைகளை முடிப்பதற்காக கடந்த புதன்கிழமை அவர் பாலர்பள்ளிக்கு வந்தார் என்றும் அப்போது அவரது உடல்நலம் நன்றாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலர்பள்ளிக்கு கடைசியாக அவர் வந்தது கடந்த புதன்கிழமைதான்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அவருக்கு அறிகுறிகள் தென்படவே மருத்துவரிடம் சென்றார்.
அறிகுறிகள் தென்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக அந்த ஆசிரியர் பாலர்பள்ளிக்கு வந்திருந்ததால், பள்ளியை 14 நாட்களுக்கு மூடவேண்டிய அவசியம் இல்லை என்று ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியத்தின் தலைமை உரிமம் வழங்கும் அதிகாரி ஜேமி ஆங் கூறினார்.
பாலர்பள்ளியில் சில வேலைகளை முடிப்பதற்காக கடந்த புதன்கிழமை அங்கு வந்த அந்த ஆசிரியர், பிள்ளைகளுக்கு அன்று வகுப்பு நடத்தவில்லை என்று பிசிஎஃப் பாலர்பள்ளி நிர்வாகப் பிரிவின் தலைமை இயக்குநர் மரினி காமிஸ் சொன்னார்.
கடந்த புதன்கிழமை அந்த ஆசிரியர் பாலர்பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு அவருக்கு உடல் வெப்பநிலைப் பரிசோதனை உள்ளிட்ட தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பாலர்பள்ளியின் ஆசிரியர்களும் பணியாளர்களும் தொலைபேசிவழி பெற்றோரை அழைத்து தகவல் அளித்ததாக திருவாட்டி மரினி கூறினார்.
#சிங்கப்பூர் #பாலர் பள்ளி #கொவிட்-19