கொரோனா கிருமித்தொற்றால் பொருளியல் ரீதியாக ஏற்பட்டுள்ள சவால் மிகவும் கடுமையாக இருக்கும் வேளையில், பொருளியலை நிலைப்படுத்தி, வேலைகளைப் பாதுகாத்து, சிரமமான காலகட்டத்தை நிறுவனங்கள் கடக்க உதவ அரசாங்கம் எதை வேண்டுமானாலும் செய்யும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் $48.4 பில்லியன் மதிப்பிலான துணை வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 27) இஸ்தானாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் லீ மேற்கண்ட கருத்தை முன்வைத்தார். வர்த்தகங்கள், ஊழியர்கள், குடும்பங்களுக்கான துணை வரவுசெலவுத் திட்டத்திற்கு $48.4 பில்லியனை அரசாங்கம் ஒதுக்கியதாக திரு லீ விவரித்தார்.
பிப்ரவரி 18ஆம் தேதி வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் உள்ளடங்கிய நடவடிக்கைகள் மூலம் நிலைமையை மதிப்பிட்டு இரண்டாவது உதவித் திட்டத்தை வகுக்க ஒரு சில மாத அவகாசம் கிடைக்கும் என அரசாங்கம் நினைத்ததாக பிரதமர் சொன்னார்.
“ஆனால், ஒரு மாதத்திற்குள் நிலைமை மாறிவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சுகாதார, பொருளியல் நிலவரம் ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது,” என்றார் அவர்.
இதற்கிடையே, சிங்கப்பூர் ஒரு பெரிய புயலை எதிர்நோக்குவதாகவும் அதைக் கடக்க ஆக வலுவான தலைமைத்துவக் குழு தேவைப்படுவதாகவும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுக்கும் பொதுத்தேர்தல் எப்போது நடக்கும் என்பது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பிரதமர் அளித்த பதில்களுக்கும் தமிழ் முரசு நாளிதழின் நாளைய (மார்ச் 28) அச்சுப் பிரதியை நாடுங்கள்!
#சிங்கப்பூர் #கொவிட்-19