சாங்கி பொது மருத்துவமனையில் பணிபுரியும் ஓர் இந்திய நாட்டவர் உட்பட சிங்கப்பூரில் மேலும் 47 பேருக்கு இன்று (மார்ச் 31) கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அந்த இந்திய நாட்டவர் அங்கு ‘ஹவுஸ்கீப்பர்’ எனும் ஒழுங்குபடுத்தும் பணிபுரிபவர் என்று தெரிவிக்கப்பட்டது.
22 வயதான அந்த ஆடவர் நீண்டகாலம் தங்க அனுமதி அட்டை பெற்றிருப்பவர். அவர் அண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பவில்லை.
அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனைகளில் அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர் தற்போது சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு நேற்று அவர் இரண்டு மணி நேரம் பணியில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நான்கு புதிய தொற்றுச் சம்பவங்களுடன் வெஸ்ட்லைட் டொ குவான் தங்குவிடுதி புதிய கிருமித்தொற்று குழுமமாக அறியப்பட்டுள்ளது. அவற்றுள் முதல் நபருக்கு கிருமித்தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 31 பேர் உள்ளூரில் கிருமித்தொற்று கண்டவர்கள். அவர்களில் 13 பேருக்கு முந்தைய கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்பு உள்ளது; மற்ற 18 பேருக்கு கிருமித்தொற்று கண்ட முந்தைய சம்பவங்களுடன் தொடர்பு இல்லை. அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தடமறியும் பணி தொடங்கியுள்ளது.
கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 16 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பியவர்கள்.
இன்று பதிவான கிருமித்தொற்று சம்பவங்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 926 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மேலும் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 423 பேரில் 22 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.
தற்போது நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 260 பேர் கான்கோர்ட் இன்டர்நேஷன்ல் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, கிளனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் டி’ரிசார்ட் என்டியுசியில் உள்ள சமூக தனிமைப்படுத்தும் இடம் ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கிருமித்தொற்று கண்டவர்களிடையேயான தொடர்புகளை ஆராய்ந்ததில் சமூக ஒன்றுகூடல்கள், வேலையிடங்கள் போன்ற இடங்கள் மூலம் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவச் சேவைப் பிரிவின் இயக்குநரான இணைப் பேராசிரியர் கென்னத் மா கூறினார்.
#சிங்கப்பூர் #கொவிட்-19