சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000ஐ எட்டியுள்ளது. புதிதாக இன்று (ஏப்ரல் 1) 74 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.
புதிதாக இரண்டு கிருமித்தொற்று குழுமங்கள் உருவாகியுள்ளன.
அவற்றில் ஒன்று வயதானவர்களுக்கான இல்லம். எண் 1 தாம்சன் லேன் முகவரியில் இருக்கும் லீ ஆ மூய் ஓல்ட் ஏஜ் இல்லத்தில் இன்று புதிதாக 10 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் 102 வயதான மூதாட்டி. சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்டவர்களில் ஆக வயதானவர் இவர்.
10 பேரில் எட்டுப் பேர் அந்த இல்லவாசிகள் என்றும் மற்ற இருவர், இல்லத்தில் இருந்த பெண் குடியிருப்பாளர்களுக்கு பராமரிப்பு அளித்த ஒருவரும் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரும் என ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான முகவை தெரிவித்தது.
‘மொரால் ஹோம் ஃபார் தெ ஏஜட் சிக்’ எனும் இல்லத்தில் நோயாளிகளுடன் தொடர்பில்லாத பணியை அந்தக் குடும்ப உறுப்பினர் பார்த்து வருகிறார்.
அந்தக் குழுமத்தில் கிருமித்தொற்று கண்ட முதல் நபருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அந்த இல்லவாசிகள் அனைவருக்கும், கிருமித்தொற்று அறிகுறிகளுடன் இருந்த ஊழியர்கள் ஆகியோருக்கு கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த இல்லத்தின் ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு, ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான முகவை ஆகியன இணைந்து இல்ல வாசிகளைப் பராமரிப்பதற்கான மனிதவள ஆதரவை ஏற்பாடு செதுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பராமரிப்பு இல்லங்களுக்கும் பார்வையாளர்கள் இம்மாதம் 30ஆம் தேதிவரை அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பாளர்கள் தொலைபேசி, காணொளி உரையாடல் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பான இடைவெளி நடைமுறை இல்லங்களிலும் செயல்படுத்தப்படும். 200 படுக்கைகளுக்கு மேல் இருக்கும் இல்லங்களில் பகுதிவாரியாகப் பிரிக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும்.
எண் 55 சுங்கை காடுட் லூப்பில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி இன்று புதிதாக உருவாகியுள்ள புதிய குழுமம். இன்று உறுதி செய்யப்பட்ட இரண்டு புதிய சம்பவங்கள், அங்கு ஏற்கெனவே பதிவாகியிருந்த ஒரு சம்பவத்துடன் தொடர்புடையவை.
தற்போதைய நிலவரப்படி மூன்று வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று குழுமங்களாக உருவெடுத்துள்ளன.
பொங்கோலில் இருக்கும் எஸ்11 தங்கும் விடுதியில் இன்று புதிதாக 6 சம்பவங்கள் பதிவாகின. வெஸ்ட்லைட் டோ குவான் தங்கும் விடுதியில் மேலும் இருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்ட சம்பவங்களில் 20 வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு ஏற்பட்ட கிருமித்தொற்று.
உள்ளூரில் ஏற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 29 ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்புடையவை;.
புதிய 25 சம்பவங்களுக்கு முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லை. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் முயற்சி தொடர்கிறது.
இன்று ஐவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதையும் சேர்த்து மொத்தம் 245 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 457 பேரில் 24 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இங்கு இதுவரை மூவர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 260 பேர் கான்கோர்ட் இன்டர்நேஷன்ல் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, கிளனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் டி’ரிசார்ட் என்டியுசியில் உள்ள சமூக தனிமைப்படுத்தும் இடம் ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று மேலும் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
#சிங்கப்பூர் #கொவிட்-19