அத்தியாவசிய சேவைகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்ய வசதிகள் செய்து கொடுத்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றைத் தவிர மற்ற எல்லா வேலையிடங்களும் இம்மாதம் 7ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு மூடப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையால் மனித நடமாட்டம் குறையும் என்பதால் கிருமித்தொற்று அதிகரிக்கும் அபாயத்தையும் குறைக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
“இதற்கு முன்னதாக, பாதுகாப்பான இடைவெளி விதிமுறை அமல்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஊழியர்கள் சிலர் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர்.
“ஆனால் இப்போது வேலையிடங்களில் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது. அனைத்து நிறுவனங்களும் மூடப்பட வேண்டும்,” என்று திருவாட்டி டியோ விவரித்தார்.
ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படலாம். இல்லையேல், நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறைக்கப்பட வேண்டும் அல்லது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்றார் அமைச்சர்.
இந்த விதிமுறையை மீறும் முதலாளிகள் தொற்றுநோய் சட்டத்தின்படி சிறைத் தண்டனை பெறக்கூடும் அல்லது அபராதம் செலுத்தக்கூடும்.
இந்தப் புதிய விதிமுறை குறித்து முதலாளிகள் தங்கள் ஊழியர்களுடன் பேச வேண்டும் என்று கூறிய அமைச்சர், இது குறித்து கூடுதல் விவரங்கள் பெற இவ்வார இறுதி நாட்களிலும் செயல்படும் மனிதவள அமைச்சின் தொடர்பு நிலையங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
மனிதவள அமைச்சு வெளியிட்ட மற்றோர் அறிக்கையில், வீட்டில் இருந்தோ அல்லது வேலையிடத்திலோ தங்கள் ஊழியர்களை வேலை செய்ய வைக்க முடியாத முதலாளிகள் அவர்களின் சம்பளம் மற்றும் விடுப்பு தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
“நிறுவனங்களில் செயல்பாடு தற்காலிகமாக தடைப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், வேலை ஆதரவுத் திட்டம் மூலம் அரசாங்கம் ஊழியர்களின் சம்பளத்துக்கு இணை ஆதரவு வழங்கும்.
“அடுத்த நான்கு வாரங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வையைத் தள்ளுபடி செய்யவும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் இந்த இடைவெளிக்குப் பின் நிறுவனங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.
“அப்படி நிறுவனங்கள் மீண்டும் வேலையைத் தொடங்கும்போது, கூடுதல் ஆள்பலத்துக்கு முதலாளிகளுக்கு உதவுவது பற்றியும் அரசாங்கம் பரிசீலிக்கும்,” என்றும் திருவாட்டி டியோ தெரிவித்தார்.