சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கு நிரந்தரவாசியான 88 வயது ஆடவர் பலியானதாக சுகாதார அமைச்சு இன்று (ஏப்ரல் 4) காலை அறிவித்தது.
இந்நாட்டில் கொரோனா கிருமியால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
காலை 5.41 மணிக்கு உயிரிழந்த இந்த முதியவருக்கு உள்ளூரிலேயே கிருமித்தொற்று ஏற்பட்டது.
மார்ச் மாதம் 29ஆம் தேதியன்று அவருக்கு இந்நோய் இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மறுநாள் தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.
ஏற்கெனவே இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு, புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அவருக்குக் கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டு கிருமித்தொற்றுக்கு பலியானார்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்ட 855வது நபர் இவர் என்றும் சிங்கப்பூர் கிரிக்கெட் கிளப் கிருமித்தொற்று வட்டாரத்துடன் தொடர்புடையவர் இவர் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,114. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கான கிருமித்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் வேளையில், உள்ளூரில் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 65 பேரில் 56 பேருக்கு உள்ளூரில் கிருமி தொற்றியது குறிப்பிடத்தக்கது.
நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் லீ சீயன் லூங், பெரும்பாலான வேலையிடங்கள் வரும் செவ்வாய்க்கிழமை முதல் மே மாதம் 4ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் புதன்கிழமையிலிருந்து மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்பர் என்றும் தெரிவித்தார்.
பாலர் பள்ளிகளும் மாணவர் பராமரிப்பு நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்திருந்தாலும் அத்தியாவசியச் சேவைகள் இயக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
#சிங்கப்பூ #கொவிட்-19