சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 4) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 75 பேரையும் சேர்த்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 1,189 ஆகியுள்ளது.
சுங்கை தெங்கா லாட்ஜ், டோ குவான் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, கோச்ரேன் லாட்ஜ் II ஆகிய மூன்று வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளுடன் கேலாங்கில் இருக்கும் திருமண நிலையமான தி ஆரஞ்சு பால்ரூம் ஆகிய நன்கும் புதிதாக உருவெடுத்துள்ள கிருமித்தொற்று குழுமங்கள்.
இன்று பதிவான புதிய சம்பவங்களில் ஆறு மட்டுமே வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு ஏற்பட்டது.
உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்ட 69 பேரில் 40 பேருக்கு முந்தைய சம்பவங்களுடன் தொடர்பு உள்ளது.
எஞ்சிய 29 சம்பவங்களுக்கு முந்தைய கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்பு இல்லை. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி அடையாளம் காணும் பணி தொடர்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இன்று 15 மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதையும் சேர்த்து மொத்தம் 297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 500 பேரில் 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இங்கு இதுவரை அறுவர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 386 பேர் கான்கோர்ட் இன்டர்நேஷன்ல் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, கிளனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் டி’ரிசார்ட் என்டியுசியில் உள்ள சமூக தனிமைப்படுத்தும் இடம் ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று காலை 88 வயதான சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆடவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இங்கு கொவிட்-19ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
#சிங்கப்பூர் #கொவிட்-19