பொங்கோலில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குமிடம் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் அதை சிறப்பாக பராமரித்திருக்க முடியும் என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது இன்று (ஏப்ரல்7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் சவால்கள் இருந்ததை ஒப்புக்கொண்ட திரு ஸாக்கி, பொங்கோலில் உள்ள ‘எஸ்11’, தோ குவானில் உள்ள வெஸ்ட்லைட் ஆகிய இரு ஊழியர் தங்குமிடங்களிலும் வெளிநாட்டு ஊழியர்களை கவனித்துக்கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் ஒருங்கிணைத்து வருவதாக கூறினார். இவையிரண்டும் ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டன.
‘எஸ்11’ தங்குமிடத்தின் நெரிசலான, சுகாதாரமற்ற நிலைமைகள் குறித்து தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் திங்களன்று வெளியிட்ட செய்தி பற்றி அவர் பேசினார்.
அறைகளில் கரப்பான் பூச்சிகள் நிறைந்திருப்பதாகவும், குப்பை குவிந்து கிடப்பதாகவும், கழிப்பறைகள் நிரம்பி வழிகின்றன என்றும் ஊழியர்கள் அச்செய்தியில் தெரிவித்திருந்தனர்.
மார்ச் 4 ஆம் தேதி கடைசியாக சோதனை செய்யப்பட்டபோது அங்கு வசதிகள் திருப்திகரமாக இருந்ததாக திரு ஸாக்கி கூறினார்.
சுகாதாரம் பேணப்படுவதையும் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய மனிதவள அமைச்சு தற்போது வெளிநாட்டு ஊழியர் நிலையத்துடனும் தங்குமிட செயல்பாட்டார்களுடனும் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஊழியர்கள் தனித்தனியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் உடல்நலக்குறைவுள்ளவர்களை பரிசோதிப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் சுகாதார அமைச்சு அங்கு மருத்துவ வசதிகளை ஏற்பாடுசெய்துள்ளது.
உடல்நலக்குறைவுள்ளவர்கள் தங்கள் அறை தோழர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வேறு இடத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.
“ஊழியர்களின் பொறுமையையும் ஒத்துழைப்பையும் நாங்கள் பாராட்டுகிறோம், தங்குமிடங்களில் வசிப்போரின் வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவோம்,” என்று மனிதவள துணை அமைச்சர் கூறினார்.