சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 8) இதுவரை இல்லாத உச்சமாக 142 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையும் சேர்த்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 1,623 ஆகியுள்ளது.
இன்று பதிவான சம்பவங்களில் இரண்டு மட்டுமே வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு ஏற்பட்டது.
உள்ளூரில் ஏற்பட்ட 140 கிருமித்தொற்று சம்பவங்களில் 55 சம்பவங்கள் ஏற்கெனவே கிருமித்தொற்று கண்ட குழுமங்களுடன் தொடர்புடையவை; அவற்றில் 40 வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதிகளின் குழுமங்களை உள்ளடக்கியவை என்பதை சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரில் நீண்டகாலம் தங்க அனுமதி அட்டை கொண்ட 32 வயது இந்திய ஆடவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு நேற்று கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது மார்பக ஊடுகதிர்ப்படம் (X-ray) அவருக்கு நிமோனியா இல்லை என்பதைக் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் பெறப்படாத நிலையில், வீட்டில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
அவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருந்தது அவரது மரணத்துக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டது. அவரது மரணத்துக்கான காரணம் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொங்கோல் S11 தங்கும் விடுதியுடன் தொடர்புடைய மேலும் 20 சம்பவங்கள் இன்று பதிவாகின. இதனையும் சேர்த்து மொத்தம் 115 பேருக்கு அங்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
வெஸ்ட்லைட் டோ குவான் தங்கும்விடுதியில் புதிதாக 4 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையும் சேர்த்து அங்கு 38 பேருக்கு கிருமித்தொற்று உள்ளது.
டோ குவான் ரோடு ஈஸ்டில் இருக்கும் டோ குவான் தங்கும் விடுதியில் புதிதாக 5 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையும் சேர்த்து அங்கு 23 பேருக்கு கிருமித்தொற்று உள்ளது.
சுங்கை தெங்கா லாட்ஜில் பதிவான 11 புதிய சம்பவங்களையும் சேர்த்து அங்கு 29 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெம்பனிஸ் தங்கும் விடுதியில் புதிதாகப் பதிவான 4 சம்பவங்களையும் சேர்த்து அங்கு மொத்தம் 21 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கோச்ரேன் லாட்ஜில் இன்று உறுதி செய்யப்பட்ட 2 சம்பவங்களையும் சேர்த்து அங்கு மொத்தம் 13 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கிராஞ்சி லாட்ஜில் இன்று உறுதி செய்யப்பட்ட 3 சம்பவங்களையும் சேர்த்து அங்கு மொத்தம் 6 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
சுங்கை காடுட் லூப்பில் இருக்கும் தங்கும் விடுதியில் பதிவான ஒரு புதிய சம்பவத்தையும் சேர்த்து அங்கு 5 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
50 மார்க்கெட் ஸ்திரீட்டில் உள்ள புரோஜெக்ட் குளோரி கட்டுமானத் தளத்துடன் தொடர்புடைய கிருமித்தொற்று குழுமத்தில் இன்று புதிதாக 6 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதையும் சேர்த்து அங்கு மொத்தம் 27 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
5 புதிய கிருமித்தொற்று சம்பவங்களையும் சேர்த்து முஸ்தஃபா கிருமித்தொற்று குழுமத்தில் மொத்தம் 50 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கெப்பல் கப்பல் பட்டறை கிருமித்தொற்று குழுமத்தில் பதிவான 3 புதிய சம்பவங்களையும் சேர்த்து அங்கு 12 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வில்பி ரெசிடன்சஸ் கிருமித்தொற்று குழுமத்தில் இன்று பதிவான ஒரு புதிய சம்பவத்தையும் சேர்த்து அங்கு 10 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிங்கப்பூரில் வேலை அனுமதிச் சீட்டுடன் பணிபுரியும் 31 வயது இந்திய நாட்டு ஆடவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பணியாற்றுகிறார். இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் தொழில்நுட்பராகப் பணியாற்றும் அவர், கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டது முதல் பணிக்குச் செல்லவில்லை. அவர் தற்போது தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்.
13 சம்பவங்கள் வேறு கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்புடையவை.
எஞ்சியுள்ள 72 உள்ளூர் சம்பவங்களில், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
இன்று குணமடைந்து வீடு திரும்பிய 29 பேரையும் சேர்த்து மொத்தம் 406 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சைபெற்று வரும் 669 பேரில் 29 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இங்கு இதுவரை அறுவர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 542 பேர் கான்கோர்ட் இன்டர்நேஷன்ல் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, கிளனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் டி’ரிசார்ட் என்டியுசியில் உள்ள சமூக தனிமைப்படுத்தும் இடம் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#சிங்கப்பூர் #கொவிட்-19