வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும்விடுதிகளில் கொரோனா கிருமித்தொற்று குழுமங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையே நான்காவது வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதி தனிமைப்படுத்தப்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் சுங்கை தெங்கா லாட்ஜ், தனிமைப்படுத்தப்படும் வளாகமாகியுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்தது.
இந்த வளாகத்தில் 506 மற்றும் 512 ஓல்ட் சுவா சூ காங் ரோடு எனும் முகவரியைக் கொண்ட பகுதிகள் அடங்கும்.
இன்று மாலை நிலவரப்படி இந்த தங்கும்விடுதியில் 29 கொரோனா கிருமித்தொற்று சம் பவங்கள் உறுதியாகியுள்ளன.
இதற்கு முன் பொங்கோலில் உள்ள ‘S11 தங்கும்விடுதி’, டோ குவானில் இருக்கும் ‘வெஸ்ட்லைட் தங்கும்விடுதி’, ‘டோ குவான் தங்கும்விடுதி’ ஆகிய மூன்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.
தற்போது நாட்டின் ஆகப் பெரிய கிருமித்தொற்று குழுமமாக ‘S11 தங்கும்விடுதி’ உள்ளது.
இங்கு 118 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. டோ குவானில் இருக்கும் இரு தங்கும்விடுதிகளிலும் 38 மற்றும் 23 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
இவற்றைத் தவிர மேலும் ஒன்பது தங்கும்விடுதிகளில் கிருமித்தொற்று குழுமங்கள் உறுதியாகியுள்ளன.