பிரதமர் லீ: வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரம், வாழ்வாதாரம், நலன் ஆகியவற்றை கவனித்துக் கொள்வோம்

பிரதமர் லீ: வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரம், வாழ்வாதாரம், நலன் ஆகியவற்றை கவனித்துக் கொள்வோம்

2 mins read
a137d8eb-2e16-42b4-9e95-ee561439e9be
இன்று (ஏப்ரல் 10) ஃபேஸ்புக் வழியாக நாட்டு மக்களுக்காக உரையாற்றியபோது பிரதமர்  வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பைப் பாராட்டினார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பைக் குறிப்பிட்டு பாராட்டிய பிரதமர் லீ சியன் லூங், வெளிநாட்டு ஊழியர்களின் நலவாழ்வின் தொடர்பில் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் இயன்ற அனைத்தையும் செய்து, அவர்களது நலனை கவனித்துக்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.

இன்று (ஏப்ரல் 10) ஃபேஸ்புக் வழியாக நாட்டு மக்களுக்காக உரையாற்றியபோது பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஆக அதிகமாக 287 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள்.

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதையும், அவர்கள் குடும்பங்களுக்குப் பணம் அனுப்புவதையும் உறுதிசெய்யவும் அவர்களின் முதலாளிகளுடன் இணைந்து செயல்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், "தேவையிருப்பின், அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்குவோம்," என்று தமது உரையில் தெரிவித்தார்.

"சிங்கப்பூரில், உங்களது மகன்கள், தந்தைகள், கணவர்கள் ஆகியோரின் உழைப்பையும் பங்களிப்பையும் நாங்கள் போற்றுகிறோம். அவர்களது நலனில், எங்களுக்குப் பொறுப்பு உள்ளதை, நாங்கள் உணர்கிறோம். நாங்கள், எங்களால் இயன்ற அனைத்தையும் செய்து, அவர்களது சுகாதாரம், வாழ்வாதாரம், நலன் ஆகியவற்றை இங்குக் கவனித்துக்கொள்வோம்; உங்களிடம் பத்திரமாகத் திரும்பி வரச் செய்வோம். அனைத்து சிங்கப்பூரர்களின் சார்பாக, நீங்கள் நலமுடன் இருக்க நான் வேண்டுகிறேன்," என்று வெளிநாட்டு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் தமது காணொளியைப் பார்த்தால் அவர்களிடம் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று குழுமங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், அதனைக் கையாள அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். தங்கும் இட நிர்வாகிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றும் அந்தக் குழு ஊழியர்களின் அத்தியாவசியத் தேவைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஏப்ரல் 11) அச்சுப் பிரதியை நாடுங்கள்!

நீங்கள் சந்தாதாரரானால் தமிழ் முரசு நாளிதழ் வீடுகளுக்கே விநியோகிக்கப்படும். இ-பேப்பரும் வாசிக்கலாம். மேல் விவரங்களுக்கு: https://www.sphsubscription.com.sg/eshop/?r=products/newsubscriptionpackages&pcode=tm

குறிப்புச் சொற்கள்