சிங்கப்பூரின் திருத்தப்பட்ட வாக்காளர் பதிவேடு சான்றளிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு முன்வைக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி மொத்தம் 2,653,942 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை தேர்தல் துறை இணையத்தளம் மற்றும் சிங்பாஸ் கைபேசிச் செயலி வழியாகச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
2019ஆம் ஆண்டு ஏப்ரலில் வாக்காளர் பதிவேடு திருத்தப்பட்டபோது அதில் 2,594,740 பேர் இடம்பெற்றிருந்தனர். இப்போது அந்தப் பதிவேட்டில் கிட்டத்தட்ட மேலும் 59,000 பேர் இணைந்துள்ளனர்.
முந்தைய தேர்தலில் வாக்களிக்கத் தவறியதால் பதிவேட்டிலிருந்து பெயர் நீக்கப்பட்ட சிங்கப்பூரர்கள், மீண்டும் தங்களது பெயரைச் சேர்க்கக் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் துறை தெரிவித்து இருக்கிறது.
தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு விடுபட்டோரின் பெயரைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்படாது என்பதால் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு தேர்தல் துறை ஊக்குவித்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் அங்குள்ள சிங்கப்பூர் தூதரகங்களுக்குச் சென்று தங்களைப் பற்றிய விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
வாக்காளர் பதிவேட்டில் பெயர் இருந்து, கடந்த 2017 மார்ச் 1ஆம் தேதியில் இருந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை குறைந்தது 30 நாட்களுக்கு வெளிநாட்டில் இருந்தவர்கள், எதிர்காலத் தேர்தல்களில் வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்கும் வகையில் தங்களை வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளக் கோரி விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு முறை வாக்காளர் பதிவேடு திருத்தப்படும்போதும் வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள் தங்களது பெயர்களை மறுபதிவு செய்யவேண்டும்.