வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் முதல் வழங்குதொகையை முதலாளிகள் பெறத் தொடங்கியுள்ளதாக நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இதில், 140,000க்கும் அதிகமான முதலாளிகளுக்கு பயன்படும் வகையில் மொத்தம் $7 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 1.9 மில்லியனுக்கும் அதிகமான உள்ளூர் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இது உதவும்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றை முறியடிப்பதற்கான திட்டம் நடப்பில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அத்தியாவசிய சேவைகளை வழங்காத துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல வர்த்தகங்கள் ஒரு மாத காலத்திற்கு தங்களது செயல்பாட்டை நிறுத்திவைத்துள்ளன.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பிப்ரவரி 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது வேலை ஆதரவுத் திட்டம் குறித்த விவரங்களை அறிவித்திருந்தார். பின்னர் மார்ச் 26, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட துணை வரவுசெலவுத் திட்டங்களில் வேலை ஆதரவுத் திட்டம் மேம்படுத்தப்பட்டது.
தொடக்கத்தில், ஒவ்வோர் உள்ளூர் ஊழியரின் சம்பளத்தின் முதல் எட்டு விழுக்காட்டை அரசாங்கம் மானியமாக வழங்க இருந்தது. சம்பள வரம்பு $3,600 என்றும் சம்பள மானியம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர், அனைத்து உள்ளூர் ஊழியர்களின் சம்பளத்தில் 25 விழுக்காட்டை மானியமாக வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. கொவிட்-19 நோய்ப் பரவலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்துத் துறை, சுற்றுப்பயணத் துறை ஆகியவற்றில் பணிபுரியும்
ஊழியர்களுக்கு 75 விழுக்காடு சம்பள மானியமும் உணவுச் சேவை துறை ஊழியர்களுக்கு 50 விழுக்காடு சம்பள மானியமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பள வரம்பு $3,600லிருந்து $4,600ஆக உயர்த்தப்படும் என்றும் வேலை ஆதரவுத் திட்டம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் துணைப் பிரதமர் ஹெங் கூறியிருந்தார். அதன் மூலம், மே, ஜூலை, அக்டோபர் மாதங்களில் முதலாளிகளுக்கு வழங்குதொகை கிடைக்கும்.
இந்நிலையில், நிறுவனங்களுக்கு உதவும் வகையில் முதலாளிகளுக்கு முதல் வழங்குதொகை இம்மாதம் வழங்கப்படும் என இம்மாதத் தொடக்கத்தில் திரு ஹெங் அறிவித்திருந்தார்.
அதன்படி, அனைத்து துறைகளையும் சேர்ந்த நிறுவனங்களுக்கு இம்மாதம் 75 விழுக்காடு சம்பள மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இனிவரும் மாதங்களில், எந்தத் துறை என்பதைப் பொறுத்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அளவுக்குச் சம்பள மானியம் வழங்கப்படும்.
முதற்கட்டமாக இம்மாதம் வழங்கப்படும் வழங்குதொகை, கடந்த ஆண்டு அக்டோபரில் ஊழியர்கள் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இம்மாதம் அவர்கள் பெறும் சம்பளத்தின் அடிப்படையில், இனி வழங்கப்படும் வழங்குதொகை சரிக்கட்டப்பட்டும்.
‘CorpPass’ வசதியைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், வரும் திங்கட்கிழமையிலிருந்து சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் இணையத்தளத்தில் ‘myTax’ பகுதிக்குச் சென்று இது குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். வழங்குதொகையைப் பெறுவவதற்கு அவை விண்ணப்பிக்கத் தேவையில்லை.