சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 15) இதுவரை இல்லாத உச்சமாக 447 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனையும் சேர்த்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 3,699 ஆகியுள்ளது.
இன்று குணமடைந்து வீடு திரும்பிய 41 பேரையும் சேர்த்து மொத்தம் 652 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில்தான் அதிக எண்ணிக்கையிலான புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இன்றைய 447 சம்பவங்களில் 404 ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதிச் சீட்டுடன் இங்கு பணிபுரிவோர்.
ஊழியர் தங்கும் விடுதிகளில் மேலும் நான்கு புதிய கிருமித்தொற்று குழுமங்கள் உருவாகியுள்ளன. ஏற்கெனவே கிருமித்தொற்று குழுமங்களாக உள்ள விடுதிகளிலும் புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆகப் பெரிய கிருமித்தொற்று குழுமமாக உருவெடுத்துள்ள பொங்கோல் S11 தங்கும் விடுதியில் புதிய 74 சம்பவங்களையும் சேர்த்து 797 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது.
நேற்று உள்ளூர் சமூகத்தில் புதிதாக 38 சம்பவங்கள் பதிவாகின. கடந்த இரண்டு வாரங்களாக சமூகத்தில் ஏற்படும் கிருமித்தொற்று எண்ணிக்கை தினமும் சராசரியாக 36 ஆகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால், வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்போரிடையே கிருமித்தொற்று குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் நாளுக்கு 260 என்ற சராசரி எண்ணிக்கையில் அது உள்ளது. ஆனால், அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 48 ஆக மட்டுமே இருந்தது. ஊழியர்களிடையே கிருமித்தொற்று பரிசோதனை முயற்சிகள் மிகவும் துடிப்புடன் மேற்கொள்ளப்பட்டிருப்பது கடந்த வார சராசரி உயர்ந்ததற்குக் காரணமாக இருக்கலாம்.
புதிய சம்பவங்களில் 32%க்கு தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது. மற்றவை தெரிந்த கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவை.
ஏப்ரல் 9 முதல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சைபெற்று வரும் 1,496 பேரில் 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்ட 3381 நபரான மலேசிய ஆடவர், கிருமித்தொற்று அல்லாமல் வேறு காரணங்களால் நேற்று உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 80.
சுகாதார அமைச்சின் விரிவுபடுத்தப்பட்ட கண்காணிப்பின்கீழ் அவரது மரணத்துக்குப் பிறகு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள், அவருக்கு கிருமித்தொற்று இருந்ததை உறுதிப்படுத்தின.
இங்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 1,540 பேர் சமூக தனிமைப்படுத்தும் இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.