வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழலில், அங்கு வசிக்கும் ஊழியர்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்க உதவி, கிருமித்தொற்றுப் பாதிப்பைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
இது மிகப் பெரிய பொறுப்பு என்றாலும், இதைச் சாதித்துக்காட்ட அரசாங்கம் தனது வளங்களை எல்லாம் அணிதிரட்டி வருவதாக திருவாட்டி டியோ குறிப்பிட்டுள்ளார். அதற்காகத்தான் ஊழியர் தங்குவிடுதிகளில் கிருமித்தொற்றுப் பிரச்சினையைக் கையாள பல அமைப்புகளும் சேர்ந்த பணிக்குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த மும்முனை உத்திகள் பின்பற்றப்பட்டு வருவதாகக் கூறிய அவர், அந்த உத்திகளை மூன்று முக்கிய செயல்திறனாளர்கள் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
தங்கும் விடுதிகளில் பாதுகாப்பான இடைவெளி விதிமுறையை அமல்படுத்தி, அது பின்பற்றப்பட்டு வருவதை உறுதிசெய்ய ‘ஃபாஸ்ட்’ குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக திருவாட்டி டியோ சொன்னார்.
‘ஃபாஸ்ட்’ குழுவினர் உணவு, தூய்மை தொடர்பான பிரச்சினைகளைக் களைவதோடு, ஊழியர்களுடன் தொடர்பிலிருந்து, அவர்களின் கருத்துகளையும் கேட்டறிவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள தொழிலகங்களிலும் கூடிய விரைவில் ‘ஃபாஸ்ட்’ குழுவினர் பணியமர்த்தப்படுவர் என்றும் அவர் சொன்னார்.
தங்கும் விடுதிகளுக்கான மருத்துவ ஆதரவும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவர்கள், தாதியர், தொழில்நுட்பர்கள் அடங்கிய குழுவினர் அங்கு பணியமர்த்தப்படுவர் என்றும் திருவாட்டி டியோ கூறினார்.
தங்கும் விடுதி நடத்துநர்களையும் முதலாளிகளையும் மூன்றாவது செயல்திறனாளர்களாக அவர் குறிப்பிட்டார். உணவு, சுகாதார விவகாரங்களைத் அவர்கள் பார்த்துக்கொண்டால் பாதுகாப்பான இடைவெளி உள்ளிட்ட மற்ற விவகாரங்களில் ‘ஃபாஸ்ட்’ குழு அதிக கவனம் செலுத்த முடியும் என்று அமைச்சர் சொன்னார்.
வெளிநாட்டு ஊழியர்கள் நலமுடன் இருப்பதை உறுதிசெய்யவும் அவர்களில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் நலம்பெற உதவவும் பல அமைச்சுகள் அணுக்கமாக இணைந்து பணியாற்றி வருவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஏப்ரல் 17) அச்சுப் பிரதியை நாடுங்கள்!
நீங்கள் சந்தாதாரரானால் தமிழ் முரசு நாளிதழ் வீடுகளுக்கே விநியோகிக்கப்படும். இ-பேப்பரும் வாசிக்கலாம். மேல் விவரங்களுக்கு: https://www.sphsubscription.com.sg/eshop/?r=products/newsubscriptionpackages&pcode=tm