சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 16) 728 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனையும் சேர்த்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 4,427 ஆகியுள்ளது. இன்று புதிதாக 5 கிருமித்தொற்று குழுமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் சில ஊழியர் தங்கும் விடுதிகளுடன் தொடர்புடையவை.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில்தான் அதிக எண்ணிக்கையிலான புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் இன்று மொத்தம் 654 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளின் பலனாக, விடுதிகளில் தங்கியிருப்போரிடையே கண்டறியப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளன.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிக்கு வெளியே வசிக்கும் வேலை அனுமதிச்சீட்டு கொண்டோரில் 26 பேருக்கு கிருமித்தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
உள்ளூர் சமூகத்தில் புதிதாக 48 சம்பவங்கள் பதிவாகின.
புதிய சம்பவங்களில் 81% ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவை. மற்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
கேகே மகளிர் மற்றும் சிறுவர் மருத்துவமனையில் அலுவலகப் பணியாளராக இருக்கும் 41 வயது சிங்கப்பூர் பெண்மணிக்கு இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஏப்ரல் 10ஆம் தேதி கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. 14ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது செங்காங் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏப்ரல் 9 முதல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று குணமடைந்து வீடு திரும்பிய 31 பேரையும் சேர்த்து மொத்தம் 683 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சைபெற்று வரும் 1,886 பேரில் 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இங்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 1,848 பேர் சமூக தனிமைப்படுத்தும் இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.