வெளிநாட்டு ஊழியர்கள் நலமாக இருப்பதை உறுதிசெய்யவும் அவர்களில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் நலம்பெற உதவவும் பல அமைச்சுகள் அணுக்கமாக இணைந்து பணியாற்றி வருவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (ஏப்ரல் 16) புதிதாக கிருமித்தொற்று கண்ட 728 பேரில் 654 பேர் வெளிநாட்டு ஊழியர்கள். இதுவரை 12 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், “அண்மைய நாட்களில் புதிதாக கிருமி தொற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதிச்சீட்டு பெற்ற வெளிநாட்டு ஊழியர்கள்.
“இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க கிருமித்தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவது, புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகாமல் தடுப்பது, அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் ஊழியர்களைப் பாதுகாப்பாக பிரித்து வைத்திருப்பது என மும்முனை உத்திகள் கையாளப்பட்டு வருவதை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ சில நாட்களுக்கு முன் விவரித்திருந்தார்,” என பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கம் மூலம் நேற்று தெரிவித்தார்.
இந்தப் பணிகளுக்கு உதவும் நோக்கில் ‘ஃபாஸ்ட்’ எனப்படும் சிறப்பு ஆதரவுக் குழுக்கள் அனைத்து வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் பணியமர்த்தப்பட்டுள்ளதை திரு லீ சுட்டினார்.
அந்தக் குழுக்களுடன் வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரத்தையும் நல்வாழ்வையும் கவனித்துக்கொள்வதற்காக மருத்துவக் குழுக்களும் ஊழியர் தங்கும் விடுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக பிரதமர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“வீடமைப்பு வளர்ச்சிக் கழக நகரங்களை, எம்ஆர்டி ரயில் பாதைகளை, விமான நிலையங்களை, துறைமுகங்களை அமைப்பதில் வெளிநாட்டு ஊழியர்கள் நமக்குக் கைகொடுத்து வருகின்றனர். சிலர் நமது தொழிற்சாலைகளில் இரவுநேரப் பணியாற்றி வருகின்றனர். வேறு சிலர் மருத்துவமனைகளிலும் தாதிமை இல்லங்களிலும் உடல்நலம் குன்றிய முதியவர்களைப் பார்த்துக்கொள்கின்றனர். அண்டை நாடுகளைச் சேர்ந்த பல நூறாயிரக்கணக்கான பணிப்பெண்களை சிங்கப்பூர் குடும்பங்கள் நம்பியிருக்கின்றன.
“அவர்களுடைய பங்களிப்புகளுக்காகவும் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களது புரிதலுக்காகவும் ஒத்துழைப்பிற்காகவும் அவர்களுக்கு நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம். இந்த சிரமமான காலகட்டத்தில் இருந்து விடுபட அவர்களுடன், குறிப்பாக தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்,” என்று பிரதமர் லீ கூறி இருக்கிறார்.
இதனிடையே, பெண்டமியர் சாலையில் அமைந்துள்ள மனிதவள அமைச்சு சேவை நிலைய ஊழியர்களையும் தங்கும் விடுதிகளுக்கான சிறப்புப் பணிக்குழுவினரையும் பிரதமர் லீ நேற்று காணொளி வழியாகச் சந்தித்தார்.