சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றை முறியடிப்பதற்கான திட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு (ஜூன் 1ஆம் தேதி வரை) நீட்டிக்கப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் அறிவித்துள்ளார்.
தற்போது இத்திட்டம் மே 4ஆம் தேதி வரை நடப்பில் உள்ளது.
கொவிட்-19 நிலவரம் குறித்து நாட்டு மக்களிடம் நான்காவது முறையாக தொலைக்காட்சிவழி இன்று (ஏப்ரல் 21) உரையாற்றிய அவர், மே 4ஆம் தேதி வரை ஏற்கெனவே நடப்பில் உள்ள நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதாவது, அத்தியாவசிய சேவைகளை வழங்கும் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, கூடுதலான வேலையிடங்கள் மூடப்படும்.
கொரோனா கிருமித்தொற்றை முறியடிப்பதற்கான திட்டத்திற்குப் பலன் கிடைத்துள்ளது தெரிவதாகக் கூறிய பிரதமர் லீ, எனினும் சிங்கப்பூர் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.
இந்நிலையில், முந்தைய கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்பில்லாத சம்பவங்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதைச் சுட்டிய அவர், உறுதிப்படுத்தப்படாத சம்பவங்கள் சமூகத்தில் வலம் வருவதை இது காட்டுவதாகச் சொன்னார்.
கிருமித்தொற்று நிலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களைக் கவனித்துக்கொள்ள அரசாங்கம் கூடுதலான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலுக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி கூறிய அவர், “சிங்கப்பூரர்களை எப்படி பார்த்துக்கொள்கிறோமோ, அதைப்போல உங்களையும் பார்த்துக்கொள்வோம்,” என்று உத்தரவாதம் அளித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதாரம், நலன், வாழ்வாதாரம் ஆகியவை கவனித்துக்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார். உதாரணத்திற்கு, ஊழியர்களுக்குத் தொடர்ந்து சம்பளம் வழங்கப்படுவதும் தாய்நாடுகளில் வசிக்கும் குடும்பத்தாருக்கு ஊழியர்கள் பணம் அனுப்புவதும் உறுதிசெய்யப்படும் என்றார் பிரதமர் லீ.