சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 24) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 897 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,075 ஆகியுள்ளது.
புதிய சம்பவங்களில் 13 சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
நேற்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் கிருமித்தொற்று எண்ணிக்கை 11,000ஐ தாண்டிய நிலையில் தென்கிழக்காசிய நாடுகளிலேயே ஆக அதிக கிருமித்தொற்று பதிவான நாடானது சிங்கப்பூர்.
சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 1,037 பேரில் 982 பேர் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள்; 25 பேர் உள்லூர் சமூகத்தில் கிருமித்தொற்று கண்டவர்கள்.
விடுதிகளில் தங்கியிருக்காத, ஆனால் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் 30 பேரும் நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
நேற்றைய நிலவரப்படி, சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் சராசரி தினசரி எண்ணிக்கை 25ஆகக் கடந்த வாரத்தில் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த சராசரி 34ஆக இருந்தது.
சமூகத்தில், தொடர்பு கண்டறியப்படாத கிருமித்தொற்று சம்பவங்களும் குறைந்தன. கடந்த வாரத்தில் அந்த சராசரி தினசரி எண்ணிக்கை 18ஆகக் குறைந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அது 20ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவற்றுள் 25% தொடர்புகள் கண்டறியப்படாத சம்பவங்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
உலக அளவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2.7 மிலியனாக உள்ள நிலையில் அமெரிக்காவில்தான் ஆகத்திகமான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்த எண்ணிக்கை அங்கு சுமார் 866,000.
சுமார் 200,000 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று வரை மொத்தம் 924 பேர் கிருமித்தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 1,368 பேரில் 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருமித்தொற்று உள்ள, ஆனால், சீரான உடல் நலத்துடன் இருக்கும் 8,874 பேர் சமூக தனிமைப்படுத்தல் வசதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.