சிங்கப்பூரில் கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடி நடவடிக்கைகள் நடப்புக்கு வந்து 18 நாட்களாகியுள்ள நிலையில் நாம் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து அந்த நடவடிக்கைகளைப் பின்பற்றி நமது சுகாதாரத்தையும் நலவாழ்வையும் பாதுகாத்துக்கொள்வது அவசியம் என்று தொடர்பு தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“இன்று ரமலான் மாதத்தின் முதல் நாள், இஸ்லாமிய நாட்காட்டியில் இது ஒன்பதாவது மாதம். உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பிருந்து, தொழுகைகள் செய்யும் மாதம்,” என்று குறிப்பிட்டுள்ள திரு ஈஸ்வரன், வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட நமது முஸ்லிம் நண்பர்கள் பலர் தங்களது குடும்பத்தாரை விட்டுப் பிரிந்திருக்கும் நிலையில் ரமலான் நோன்பை நோற்றாலும் மனதால் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் என்று குறிப்பிட்டு, முஸ்லிம் நண்பர்களுக்கு ரமலான் நோன்புக்கான வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
(காணொளியை முழுமையாகக் காண 'முழுப்பக்க'த் தெரிவைப் பயன்படுத்துங்கள்)
அத்துடன், ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளரும் பாடகருமான இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் வெளிநாட்டு ஊழியர்களுக்காகப் பதிவு செய்து அனுப்பிய காணொளி ஒன்றையும் தமது பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் அமைச்சர் ஈஸ்வரன்.
தமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு காணொளியைச் சாத்தியமாக்கிய திரு ரஹ்மான் மற்றும் அந்தப் பணியில் ஈடுபட்டோருக்கு தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் அமைச்சர்.
‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ எனும் இந்திப் படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி’ எனும் பொருள்படக்கூடிய ‘ஜெய் ஹோ’ எனும் பாடலைக் குறிப்பிட்டு, ஒன்றிணைந்து செயல்பட்டு நாமும் இந்த கொவிட்-19க்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்று பதிவிட்டுள்ளார் திரு ஈஸ்வரன்.