கொவிட்-19 சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 46 வயது இந்திய ஊழியர் நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) காலை உயிரிழந்ததன் தொடர்பில் சுகாதார அமைச்சு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
படிக்கட்டு தளத்தில் அசைவின்றி கிடந்த அவர் பின்னர் உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உயரமான இடத்திலிருந்து விழுந்ததால் ஏற்பட்ட பல காயங்களால் அவர் உயிரிழந்திருப்பதாகவும் அவரது மரணம் கொவிட்-19ஆல் ஏற்படும் உடல்நல சிக்கல்களால் நேர்ந்ததில்லை என்றும் நேற்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு மனநல ஆதரவு குறித்து நிறுவனங்களுக்கான ஆலோசனைக் குறிப்பு வெளியாகி இருக்கிறது.
கொரோனா நோய்ப் பரவல் வேலை ஏற்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தி இருப்பதாக அந்த ஆலோசனைக் குறிப்பு குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 897 பேரில் உள்ளூர் சமூகத்தில் 25 பேருக்கு மட்டுமே கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 29ஆம் தேதிக்குப் பிறகு ஆகக் குறைந்த அத்தகைய சம்பவங்கள் இவை.
நேற்று கிருமித்தொற்று கண்டவர்களில் 853 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். விடுதிகளில் வசிக்கும் சுமார் 323,000 ஊழியர்களில் 3 விழுக்காட்டினர் அதாவது 9,929 ஊழியர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் பொங்கோல் எஸ் 11 விடுதியில் மட்டும் 2,263 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இங்கு கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 12,075 ஆகியுள்ளது.
இங்கு புதிதாக 9 கிருமித்தொற்று குழுமங்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பென்குலன் ஸ்திரீட்டில் உள்ள ஸ்ட்ரான் ஹோட்டல், ஈஸ்ட் கோஸ் ற்றோட்டில் இருக்கும் நேச்சர்லேண்ட் ஈஸ்கோஸ்ட் ஸ்பா, அட்மிரல்டியில் உள்ள அலானியா லாட்ஜ், தானா மேராவில் உள்ள SSKBJV ஊழியர் தங்கும் விடுதி, மண்டாய் எஸ்டேட்டில் உள்ள வெஸ்ட்லைட் ஜுனிபர் ஊழியர் தங்கும் விடுதி, 112, நெய்தல் ரோடு, 10 ஷா ரோடு ஊஇழ்யர் தங்கும் விடுதி, 2 சுங்கை காடுட் அவென்யூ, 11 துவாஸ் அவென்யூ 10 ஆகியவை அந்தப் புதிய குழுமங்கள்.
ஹவ்காங்கில் இருக்கும் ஆல் செயின்ட்ஸ் ஹோம் தாதிமை இல்லத்தில் சுகாதாரப் பராமரிப்பு உதவியாளராகப் பணிபுரியும் 21 வயது நபருக்கு கிருமித்தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அந்த இல்லம் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த நபருட்ன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புக்கிட் மேரா பலதுறை மருந்தகத்தில் பணிபுரியும் 43 வயது பெண் தாதிக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 38 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 956 பேர் கிருமித்தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 1,229 பேரில் 24 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருமித்தொற்று உள்ள, ஆனால், சீரான உடல் நலத்துடன் இருக்கும் 9,878 பேர் சமூக தனிமைப்படுத்தல் வசதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.