கொவிட்-19 கிருமிப் பரவல் பிரச்சினை முடிவுக்கு வந்ததும் உடனடியாக அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளும் மீண்டும் தொடங்கிவிடாது என்றும் சில துறைகள் செயல்படத் தொடங்க நீண்டகாலம் ஆகலாம் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தமது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்காமல் இருக்க கிருமித்தொற்றுக்கான பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் தொடர்புகளின் தடங்களைக் கண்டறிவதைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.
“அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்து இயங்கச் செய்திருக்கிறோம். என்றாலும் மற்ற துறைகள் ஒரே நேரத்தில் அல்லாமல் படிப்படியாகவே செயல்படத் தொடங்கும்,” என்று திரு லீ குறிப்பிட்டுள்ளார்.
“சில தொழில்துறைகள், மற்றதைவிட, முன்கூட்டியே திறக்கப்பட்டு, விரைவில் மீட்சி காணும். மற்ற துறைகள், குறிப்பாக பொழுதுபோக்குக் கூடங்கள், பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வுகள் போன்று, கூட்டத்தை ஈர்க்கும் துறைகள் அல்லது மக்கள் பிறருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தும் துறைகள் காத்திருக்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூரில் நமது பொருளியலைத் தொடர்ந்து இயங்கச் செய்வதற்கு முக்கியமான துறைகளும் நம்மை உலகத்தோடும் உலகளாவிய விநியோகத் தொடரோடும் இணைக்கும் துறைகளும் முன்கூட்டியே திறக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கு நிறுவனங்கள், ஊழியர்கள், அரசாங்கம் ஆகியவற்றிடையே அணுக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
இன்று வழங்கிய மே தின உரையில் சிங்கப்பூரில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அவர்கள் ஆற்றிய பங்கிற்காக நன்றியையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார் பிரதமர்.
இந்தச் சிரமமான காலகட்டத்தில் சிங்கப்பூரைத் தொடர்ந்து இயங்கச் செய்து வரும் அத்தியாவசிய சேவைப் பணியாளர்களுக்குத் தாம் மிகவும் நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மே தின வாழ்த்துகளை திரு லீ தெரிவித்துக்கொண்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (மே 1) அச்சுப் பிரதியை நாடலாம்.
தமிழ் முரசு நாளிதளின் மின்னிலக்கப் பதிப்புக்கு (இ-பேப்பர்) தற்போதைய மாதாந்தர கட்டணம் $3.90 மட்டுமே. மேல் விவரங்களுக்கு: https://tmsub.sg/tmadfb
வாசகர்களுக்கு தமிழ் முரசின் மே தின வாழ்த்துகள்!