கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகள், நோய்கண்ட 11 நாட்களுக்குப் பிறகு கிருமியைப் பரப்பும் அபாயம் இல்லை என்று சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சிங்கப்பூரில் தற்போது கொவிட்-19 நோயாளிகளுக்கு இரண்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
ஆனால், நோயாளிகளின் உடலில் கிருமி இருந்தாலும் அவர்களிடமிருந்து கிருமி பரவுவதாகப் பொருள்படாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புதிய கண்டுபிடிப்புகள், நோய்கண்டவர்களை குணமடைந்தவர்களாக வீட்டுக்கு அனுப்பும் முறையை மாற்றியமைக்க அனுமதிப்பதாக சிங்கப்பூர் தொற்று நோய்கள் தடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நோய்கண்டவர்களை குணமடைந்தவர்களாக வீட்டுக்கு அனுப்பும் முறையை மாற்றுவது தொடர்பான முடிவை சுகாதார அமைச்சுதான் எடுக்க வேண்டும். இந்த ஆய்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பாகவே சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகளை நன்கு ஆராய்ந்து பின்னர் நோயாளிகளின் நிர்வாகத் திட்டத்தில் இதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து மதிப்பிடப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் கொவிட்-19 நோயாளிகளை நிர்வகிக்கும் மருத்துவ உத்தி, அண்மைய உள்ளூர், அனைத்துலக அளவிலான மருத்துவமனை மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் வழிநடத்தப்படுகிறது.
இந்தப் புதிய ஆய்வின் ஆதாரங்களை சிங்கப்பூர் ஏற்றுக்கொண்டால் 80 விழுக்காட்டு கொவிட்-19 நோயாளிகள் நோய்கண்ட 11 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்படலாம்.
மற்றவர்களுக்கு நோயின் கடுமை காரணமாக கூடுதல் சிகிச்சை தேவைப்படலாம்; ஆனால் அவர்களும் கிருமியைப் பரப்பும் சாத்தியம் இல்லாததால் தனிமைப்படுத்தல் தேவைப்படாது.
தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையம் (NCID), Academy of Medicine’s Chapter of Infectious Disease Physicians ஆகியவை இந்த ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டன.
73 நோயாளிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு முடிவுகளை பொதுப்படையாக எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்ட தேசிய தொற்று நோய்கள் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் லியோ யீ சின், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு இதிலிருந்து விதிவிலக்கு என்றார்.
ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கொவிட்-19 நோயாளிகளின் தொண்டை, நுரையீரல் ஆகியவற்றிலிருந்து கிருமி பரவுவது நோய்கண்ட முதல் வாரத்தில் மட்டுமே நிகழ்வதாகவும் எட்டாவது நாளிலிருந்து கிருமி வெளிப்படுவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
கடைசி சொட்டு கிருமிகூட இல்லாததை உறுதி செய்யும் நோக்கில் சிங்கப்பூரில் 11வது நாள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக பேராசிரியர் லியோ குறிப்பிட்டார்.
இந்த ஆய்வு முடிவை பிரபல அனைத்துலக சஞ்சிகையில் வெளியிடும் திட்டம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online