வெளிநாட்டு ஊழியர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்

வெளிநாட்டு ஊழியர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க புதிய செயலி அறிமுகம்

2 mins read
7be8102d-d7e3-4d10-93af-546a7b4bd1d7
தமிழ், ஆங்கிலம், மாண்டரின், பெங்காலி ஆகிய மொழிகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஊழியர்கள் ஒரு நாளுக்கு இரு முறை தங்களது உடல் வெப்பநிலையை அதில் பதிவிடலாம். அவர்களுக்கு இருமல், தொண்டை வலி, சளி, சுவாசப் பிரச்சினை ஆகியவை இருந்தால் அந்தச் செயலியில் பதிவிட்டுத் தெரிவிக்கலாம். படம்: PLAY.GOOGLE.COM -
multi-img1 of 2

வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது அன்றாட உடல் நலம் பற்றி தெரிவிப்பதற்காகவும் அவர்களது ஆரோக்கியத்தை மேம்பட்ட முறையில் பேணுவதற்காகவும் புதிய வளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது மனிதவள அமைச்சு.

ஊழியர்கள் தங்களது ஆரோக்கியம் பற்றி பதிவிடுவதற்கான கைபேசிச் செயலி ஒன்றும் தங்களது ஊழியர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பதை முதலாளிகள் அறிந்துகொள்வதற்காக வெளிநாட்டு ஊழியர் முகவரி சேவை வசதி ஒன்றும் அதில் அடக்கம்.

கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, சில ஊழியர்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், சமூகப் பராமரிப்பு வசதிகள் போன்ற இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் இருக்கும் இடத்தை முதலாளிகள் அறிந்துகொள்ள இந்த இணையச் சேவை பயன்படும்.

கொரோனா பரவும் அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் அல்லது பணி புரியும் ஊழியர்கள் 'டிரேஸ் டுகெதர்' செயலியின் அண்மைய பதிப்பைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அது ஜூன் மாதம் முதல் தேதிலிருந்து செயல்பாட்டுக்கு வரும்.

விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள், கட்டுமானத் துறை, கப்பல் துறை போன்றவற்றில் பணிபுரிவோரிடையே தொடர்பு தடங்களைக் கண்டறிய இது அவசியம்.

ஊழியர்கள் தங்களது உடல்நிலை பற்றிய தகவல்களைப் பதிவிட FWMOMCare எனப்படும் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் தமிழ், ஆங்கிலம், மாண்டரின், பெங்காலி ஆகிய மொழிகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஊழியர்கள் ஒரு நாளுக்கு இரு முறை தங்களது உடல் வெப்பநிலையை அதில் பதிவிடலாம். அவர்களுக்கு இருமல், தொண்டை வலி, சளி, சுவாசப் பிரச்சினை ஆகியவை இருந்தால் அந்தச் செயலியில் பதிவிட்டுத் தெரிவிக்கலாம்.

அத்தகைய பிரச்சினைகள் இருப்பவர்கள் மருத்துவ உதவியை நாடும்படி ஊழியர்களுக்கு செயலி நினைவூட்டும். அந்தச் செயலி வழியாக தகவல் அறிந்து மருத்துவர் ஒருவர் 30 நிமிடங்களுக்குள் நோயாளியுடன் தொலைபேசி வழியாக கலந்தாலோசிப்பார்.

வேலை அனுமதிச் சீட்டு, எஸ் பாஸ் வைத்திருக்கும் ஊழியர்கள் இந்தப் புதிய செயலியை பதிவிறக்கிக் கொள்ளுமாறு நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. ஆண்டிராய்டு, ஆப்பிள் சாதனங்களில் அவற்றைப் பதிவிறக்கலாம்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்