சிங்கப்பூரில் இன்று (ஜூன் 9) நண்பகல் நிலவரப்படி புதிதாக 218 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,514 ஆகியுள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் ஆறு உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.
இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.
நேற்று உறுதி செய்யப்பட்ட 386 கிருமித்தொற்று சம்பவங்களில் 2 முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாதவை. அவற்றால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் 26 வயது சிங்கப்பூரர்; மற்றவர் வேலை அனுமதிச்சீட்டு கொண்டுள்ள, 59 வயதான சுவிட்சர்லாந்து நாட்டவர்.
பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்களில் சிகிச்சை பெற்று வந்த அவர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த மாதம் 30ஆம் தேதி முதலே அந்த சிங்கப்பூரருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன; சுவிட்சர்லாந்து நாட்டவருக்கு இம்மாதம் 2ஆம் தேதி முதல் அறிகுறிகள் தென்பட்டன.
நேற்று பதிவான 384 சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் தொடர்பானவை.
216 தாகூர் லேன், 9B டெக் பார்க் கிரசென்ட், 16 டெக் பார்க் கிரசென்ட், 115 துவாஸ் வியூ வாக் 1 என நான்கு புதிய கிருமித்தொற்று குழுமங்கள் அறிவிக்கப்பட்டன.
உள்ளூர் சமூகத்தினரிடையே கிருமித்தொற்று ஏற்படுவது கடந்த வாரத்தில் சராசரியாக 9ஆக உயர்ந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 3ஆக இருந்தது.
அதே போல, முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு 4 என உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 2ஆக இருந்தது.
நேற்று மேலும் 482 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதனையும் சேர்த்து இது வரை 25,359 பேர் குணமடைந்துள்ளனர்.
இது வரை கொரோனா கிருமித்தொற்றால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்; கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக நீடிக்கிறது.
உலக அளவில் இதுவரை 7.19 மில்லியன் மக்கள் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 408,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online