சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக இந்த மருந்தை முதன்முதலாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் நாடுகளின் வரிசையில் சிங்கப்பூரும் சேர்ந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
‘கிலெட் சயன்சஸ்’ நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா கிருமித்தொற்று பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு கொடுக்க சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் தற்பொழுது நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் கடுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா கிருமித்தொற்று உள்ள நோயாளிகளுக்கு பலன் தரக்கூடிய மருந்தாக இந்த மருந்து அடையாளம் காணப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
இந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்கும்போது இது குறித்த பாதுகாப்பு அம்சங்களை சேகரிப்பதுடன் மருந்து பயன்பாட்டைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.
ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தும் நோக்கில் அதைப் பதிவு செய்ய மே மாதம் 22ஆம் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மூன்று வாரங்களில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
சுவாசக் கோளாறினால் கூடுதல் பிராணவாயு தேவைப்படும் நோயாளிகள் அல்லது சுவாசிக்க உதவுவதற்காக உடலில் சுவாசக் கருவி பொருத்தப்பட வேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள் ஆகியோருக்கு இந்த மருந்து கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணையம் விளக்கம் தந்துள்ளது.
அமெரிக்காவின் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அலர்ஜி அண்ட் இன்ஃபெக்ஷியஸ் டீசிசஸ்’ என்ற தேசிய ஒவ்வாமை, தொற்று நோய்க் கழகம் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் பெற்ற தகவல்கள், கிலெட் சயன்சஸ் நிறுவனம் மேற்கொண்ட சோதனையில் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பரிசோதனைகளில் சிங்கப்பூரும் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆணையம் தற்பொழுது சுகாதார அமைச்சுடனும் மற்ற நிபுணர்களுடனும் கலந்து ஆலோசித்து கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஏனைய நோயாளி களுக்கும் இந்த மருந்தை கொடுப்பது பற்றி ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.