சிங்கப்பூரில் இன்று (ஜூன் 14) நண்பகல் நிலவரப்படி புதிதாக 407 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,604 ஆகியுள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 9 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் நால்வர் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி; ஐவர் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள்.
மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.
இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.
கொவிட்-19 சிக்கல்களால் நேற்று முன்தினம் (ஜூன் 12) 73 வயது சிங்கப்பூர் ஆடவர் உயிரிழந்ததாக நேற்று அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்ட 161வது நபரான அவருக்கு கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு, நாட்பட்ட சிறுநீரக நோய் போன்ற பிரச்சினைகள் இருந்தன. சாஃப்ரா ஜூரோங் கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர் அவர்.
இவரையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை 26 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்தனர். கிருமித்தொற்று கண்டு, ஆனால் வேறு காரணங்களால் 10 பேர் உயிரிழந்தனர்.
நேற்று 347 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானதையடுத்து, சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 40,000ஐ கடந்தது.
நேற்று உறுதி செய்யப்பட்ட 5 சம்பவங்கள் உள்ளூர் சமூகத்தில் பதிவானவை. அவர்களில் இருவர் சிங்கப்பூரர்; மூவர் வேலை அனுமதிச் சீட்டு கொண்டவர்கள்.
பாதிக்கப்பட்ட இரு சிங்கப்பூரர்களில் ஒருவர் 15 வயது சிறுமி. அவர் செயின்ட் ஆன்டனி’ஸ் கனோசியன் உயர்நிலைப் பள்ளி மாணவி. மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொண்ட பரிசோதனைகளில் அவருக்கு முன்பு கிருமித்தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளிலிருந்து பார்த்தால், அதிரடித் திட்டம் நடப்பில் இருந்தபோது அவருக்கு கிருமித்தொற்று இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு வேறு கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லை என்று கூறப்படுகிறது.
மற்றொரு சிங்கப்பூரரான 67 வயது மாது எஸ்சிஎம் துவாஸ் லாட்ஜ் விடுதியில் பணிபுரிபவர் அவர்.
உள்ளூர் சமூகத்தினரிடையே கிருமித்தொற்று ஏற்படுவது கடந்த வாரத்தில் சராசரியாக 8ஆக உயர்ந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 7ஆக இருந்தது.
அதே போல, முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு 4 என உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 2ஆக இருந்தது.
நேற்று மேலும் 768 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதனையும் சேர்த்து இது வரை 28,798 பேர் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் இதுவரை சுமார் 7.85 மில்லியன் மக்கள் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 431,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online