தந்தையர் நமது ஆதரவான தூண்கள் என்றும் அவர்கள் தனிப்பட்ட அளவில் எந்த ஒரு சிரமத்தை எதிர்நோக்கினாலும் அதை வெளிக்காட்டாமல் திடமான முகத்துடன் தங்களுடைய குடும்பங்களுக்காகத் தொடர்ந்து போராடுகிறார்கள் என்றும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
தந்தையர் தினத்தை முன்னிட்டு பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டு இருந்தார்.
“கடந்த சில மாதங்களாக, கொரோனா கிருமித்தொற்று பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அது தந்தையருக்கு, குறிப்பாக முன்னிலையில் முக்கிய பணிகளில் ஈடுபட்டு வரும் தந்தையருக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. தந்தையர் பலர் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர், சிலர் வேலையை இழந்து இருக்கலாம் அல்லது வேலை மாறியிருக்கலாம். வீட்டிலிருந்து வேலை பார்த்துக்கொண்டே தந்தையர் பலர் குடும்பத்தையும் பராமரித்து வருகின்றனர்.
“கடினமான நேரத்தை எதிர்நோக்கும் தந்தையர் சோர்ந்துவிடக்கூடாது,” எனப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உதவி தேவைப்பட்டால், அதை நாடத் தயங்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
தங்கள் தந்தையர் சிரமப்படுவதாகப் பிள்ளைகள் உணர்ந்தால், தங்கள் அன்பும் ஆதரவும் அவர்களுக்கு உண்டு என்பதைத் தெரிவிக்கவேண்டும் என்று திரு லீ கேட்டுக்கொண்டார்.
தந்தையர், தாத்தாக்கள், விரைவில் தந்தை ஆகவிருப்போர்-அனைவருக்கும் தமது இனிய தந்தையர் தின வாழ்த்துகளைப் பிரதமர் தெரிவித்துக்கொண்டார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online