அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று (ஜூன் 23) சிங்கப்பூரின் 13வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தல், கொவிட்-19 பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிறகான தற்போதைய இரண்டாம் கட்டத் தளர்வின்போது நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தேர்தல் தேதியைக் குறிப்பிடும் தேர்தல் ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனு தாக்கல் ஜூன் 30 ஆம் தேதி இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை தெரிவித்துள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு மக்களிடையே தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய, பிரதமர் லீ சியன் லூங், கோவிட் -19 நிலைமை ஓரளவுக்கு நிலைத்தன்மையை எட்டியுள்ளதால் பொதுத் தேர்தலை இப்போது நடத்த முடிவு செய்ததாகக் குறிப்பிட்டார்.
தேர்தலுக்குப் பிறகு, கொரோனா கிருமித்தொற்றைக் கையாளுதல், நாட்டின் பொருளியல், வேலைகள் போன்றவற்றை உள்ளடக்கிய தேச முன்னேற்றம் தொடர்பான அம்சங்களில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த முடியும் என்றும் அதன் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய கடினமான முடிவுகளையும் மேற்கொள்ள முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.