பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைவர் லோ தியா கியாங், கட்சியின் முக்கிய தலைவர்களான திரு சென் ஷோ மாவ், திரு பிங் எங் ஹுவாட் ஆகியவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளிக் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங் இந்த அறிவிப்பை இன்று (ஜூன் 25) நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தின் முடிவில் அறிவித்தார்.
இந்த மூவரும் போட்டியிட விருப்பமில்லை என்ற தங்களது விருப்பத்தை சில காலத்துக்கு முன்பு பகிர்ந்துகொண்டதையடுத்து, அவர்களுடன் கலந்தாலோசித்து கட்சித் தலைமை இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
“போட்டியிடவில்லை எனும் முடிவு அவர்கள் ஓய்வு பெறுவதைக் குறிக்காது,” என்று கூறினார் திரு சிங்.
பாட்டாளிக் கட்சியின் வெற்றியை இலக்காகக் கொண்டுள்ள அதேவேளையில் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலின்படி இளையர்களுக்கு பயிற்சி அளிப்பது, கட்சியின் தலைமைத்துவ அடித்தளத்தை விரிவுபடுத்துவது, ஆகிய மூன்று அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய, இளைய தலைவர்களுக்கு நாடாளுமன்ற, நகரமன்ற அனுபவம் தேவைப்படுவதுடன் பாட்டாளிக் கட்சியின் மூத்த தலைவர்கள் வேறு நிலையில் தங்கள் பங்களிப்பை வழங்க இது உகந்த நேரம் என திரு சிங் கூறினார்.
கட்சியின் தகவல் மற்றும் அனுபவ வளங்களாக விளங்கும் மூத்த தலைவர்கள் மிகவும் முக்கியமானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online