சிங்கப்பூரில் இன்று (ஜூன் 29) புதிதாக 202 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து, இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43,661ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் அறுவருக்கு சமூக அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள். எஞ்சிய இருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
இந்நிலையில், சமூக அளவில் நேற்று கிருமித்தொற்று கண்ட 11 பேரில் ஈஸ்ட் ஸ்பிரிங் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவரும் அடங்குவார்.
உடல்நலம் சரியில்லாததைத் தொடர்ந்து அவர் மருத்துவரிடம் சென்றார். அவருக்கு தீவிர மூச்சுப் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு, அவருக்கு கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை அந்த மாணவருக்கு அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் பள்ளிக்குச் செல்லவில்லை.
நேற்று 213 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்று சமூக அளவில் தொற்று உறுதி செய்யப்பட்ட 11 பேரில் அறுவர் சிங்கப்பூரர்கள். எஞ்சிய ஐவர் வேலை அனுமதி அட்டை, வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள். அந்த ஐவருக்கும் கிருமி தொற்றியதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
சமூக அளவில் தொற்று கண்டவர்கள் இம்மாதம் 25ஆம் தேதி சென்றிருந்த இடங்களின் பட்டியலை அமைச்சு வெளியிட்டது. எண் 5 தெம்பனிஸ் ஸ்திரீட் 32, தெம்பனிஸ் மார்ட்டில் உள்ள மெக்டானல்ட்’ஸ் உணவகம், எண் 136 மார்சிலிங் ரோட்டில் உள்ள அல் இமான் உணவகம் ஆகியவை அவை.
சமூக அளவில் தொற்று கண்டவர்கள் இம்மாதம் 26ஆம் தேதி சென்றிருந்த இடங்களின் பட்டியலையும் அமைச்சு வெளியிட்டது. முஸ்தஃபா சென்டர், எண் 961 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 92ல் உள்ள அமான் ஹவுஸ்ஹோல்ட் சப்லைஸ், எண் 962 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 91ல் உள்ள பிரைம் சூப்பர்மார்க்கெட் ஆகியவை அவை.