கொவிட்-19 கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்வதற்கு பாட்டாளிக் கட்சி கொடுக்கும் முக்கியத்துவத்தை அதன் தேர்தல் அறிக்கையிலிருந்து தெரிந்துகொள்ளலாம் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் திரு பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முதல் அத்தியாயத்தில் கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்வதற்கான பரிந்துரைகள் மேற்கொள்காட்டப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
“கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை என்று பிரதமர் லீ சியன் லூங் பொதுவாகப் பேசியிருப்பது முறையல்ல,” என்று செங்காங் குழுத் தொகுதியில் இன்று (ஜூலை 7) தொகுதி உலா மேற்கொண்டபோது செய்தியாளர்களிடம் திரு பிரித்தம் சிங் தெரிவித்தார்.
கொரோனா கிருமித்தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகளை விரிவுபடுத்துதல், கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பூசிகள் தயாரானதும் அவற்றை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி அவற்றைப் போட்டுக்கொள்வதைக் கட்டாயமானதாக்குதல் போன்ற பரிந்துரைகள் தமது கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை திரு பிரித்தம் சிங் சுட்டினார்.
எதிர்க்கட்சிகள் கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள எவ்வித பரிந்துரைகளையும் முன்வைக்கவில்லை என்று நேற்று இணையம் வழி நடத்தப்பட்ட பகல் நேர தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் லீ கூறியதற்குப் பதிலளிக்கும் வகையில் திரு சிங் கருத்துகள் இருந்தன.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறைந்தபட்ச ஊதியம் போன்ற விவகாரங்களை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு பிரசாரம் செய்வதாகவும் நெருக்கடி காலங்களை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து பரிந்துரைகளை முன்வைக்கவில்லை என்று பிரதமர் லீ தெரிவித்திருந்தார்.
“நியாயமான சம்பளம் என நாம் ஏற்றுக்கொள்ளும் தொகையைவிட குறைவான தொகையை ஏறக்குறைய 100,000 பேர் ஈட்டுகின்றனர். இதைத்தான் பாட்டாளிக் கட்சி பல தேர்தல் அறிக்கைகளில் தெரிவித்து வருகிறது. குறைந்தபட்ச ஊதியத்துக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்,” என்று திரு பிரித்தம் சிங் உறுதி அளித்தார்.