சிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020ல் முதலில் வாக்களித்தவர்களுள் பிரிட்டனில் வசிக்கும் சிங்கப்பூரர்களும் அடங்குவர்.
லண்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு (சிங்கப்பூரில் பிற்பகல் 3 மணி) வாக்களிப்புக்கு கதவுகளைத் திறந்துவிட்டது. ஆனால், அதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே தூதரகக் கட்டடத்திற்கு வெளியே கிட்டத்தட்ட 15 பேர் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றிருந்தனர்.
பணி நிமித்தம் கடந்த ஆண்டு லண்டனுக்குக் குடிபெயர்ந்த திரு ஸாக் ஹோ, காலை 7.45 மணிக்கே வந்திருந்தவர்களில் ஒருவர். அல்ஜுனிட் குழுத்தொகுதியைச் சேர்ந்த அந்த 28 வயது தணிக்கையாளர் வெளிநாட்டில் வாக்களித்தது இதுவே முதன்முறை.
“அல்ஜுனிட் குழுத்தொகுதியில் கடும் போட்டி நிலவுவது நல்லதுதான் என நினைக்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் வென்ற, தோற்ற கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வந்துள்ளது,” என்றார் திரு ஹோ.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவரான திரு டேரன் சோய், வாக்களிப்பதற்காக மாஸ்கோவில் இருந்து லண்டன் சென்றுள்ளார்.
ஹவ்காங் தனித்தொகுதியைச் சேர்ந்த திரு டேரன், மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் வெளிநாடு சென்றுள்ளார்.
“தேர்தல் செயல்முறை மிக முக்கியமானது. அதிலும், முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளதால் அதில் நானும் எனது பங்கை ஆற்ற வேண்டுவதை இன்றியமையாததாகக் கருதுகிறேன்,” என்றார் 24 வயதான திரு டேரன்.
இந்தத் தேர்தலில் 6,570 சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல் துறையின் தகவல் கூறுகிறது.
கடந்த 2015 பொதுத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 4,868 ஆக இருந்தது.
லண்டன், பெய்ஜிங், கேன்பரா, துபாய், ஹாங்காங், நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, ஷங்ஹாய், தோக்கியோ, வாஷிங்டன் எனப் பத்து நகரங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காக அனைத்து வெளிநாட்டு வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.